Thursday, July 28, 2016

சேலத்து கதைகள் - வாடகை சைக்கிள்

முதன் முதல் சைக்கிள் ஒட்டிய நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. சின்னக் கடைவீதியின் பாதாள மேடு, பள்ளங்களை கடந்து, கறிக்கடை பாய் சந்தில் நுழையாமல், மூணு பிள்ளையாரை சுற்றி, மீண்டும் வந்த பொழுது, அடுத்த ரவுண்டிற்கு தம்பி காத்திருந்தான்.
அடுத்த இருபது நிமிடங்களுக்குள் அவன் கற்றுக்கொள்ள வேண்டும், என்கிற தவிப்பும், ஆர்வமும் தெரிந்தது.
சீக்கிரம் உடுடா
கிட்டத்தட்ட, என்னிடம் இருந்து, சைக்கிளை பிடுங்கி கொண்டு, அவன் ரெண்டே மிதியில் ராஜாஜி பவனைத் தாண்டியிருந்தான்.
நான் சைக்கிளை மீண்டும் கார்த்திக் கடையில் விட தீர்மானித்து காத்திருந்த பொழுது எதிர்பாராத சம்பவம் நடந்தது.
கிட்டத்தட்ட அந்த ரவுண்ட் முடிந்து, தம்பி தூர வருவது தெரிந்தது. கற்றுக் கொள்ளும் ஆர்வத்தினாலோ, உற்சாகத்தினாலோ, அவன் திடீரென்று இரண்டு கைகளையும் ஹேண்டில் பாரில் இருந்து எடுத்து விட்டு, சுதந்திர உணர்வில், என்னை நோக்கி வரும் பொழுது, திடீரென்று நடுவில்.......அந்த குடிகாரனை எதிர்பார்க்காமல்....
குடிகாரனின் முட்டி பெயர்ந்து விட்டது.
"ழேய்...."
தமிழின் பிரத்யேக பாஷைகளை உபயோகிக்க தொடங்கினான். 
வாடகை சைக்கிள் பொலிவிழந்து, அருகில் இருந்த முனிசிபல்  ஸ்கூலின் சுவரின் காரையை பெயர்த்திருந்தது.
ஆங்காங்கே, சேதாரமான சைக்கிளை ஒன்று திரட்டி, பிடித்து வைத்து கொண்டான்.
"போடா...கேனப்....மேல வந்து விடறயா?... மேல வந்து இடிச்ச இல்ல....நூறு ரூபாய் எடுத்து வை...."
நான்  தம்பியையும், சைக்கிளையும் காப்பாற்ற உள்ளே நுழைந்தேன். காய்கறி வந்தவர்கள் பார்த்துக் கொண்டே கடந்தார்கள்.
"அண்ணா...அண்ணா....தெரியாம இடிச்சுட்டான்...மன்னிச்சுடுங்க..."
"நீ யாரூரா?"
"அவன் அண்ணன்..."
"நீ பாப்பார பையன்தாண்டா? நட உங்க வூட்டுல நியாயம் கேட்கலாம்"
எனக்கு மாமாவின் பெல்ட் ஒரு முறை ஞாபகத்திற்கு வந்தது.
"அண்ணா...சாரிண்ணா ...தெரியாம நடந்துடிச்சி....வீட்டில தெரிஞ்சா கொன்னுடுவாங்க..."
"இப்படி மேல வந்து இடிக்கறியே, யாரு வந்து பார்ப்பா? இதெல்லாம் வேலைக்கு ஆகாது...நட"
தம்பி தனக்கு சம்பந்தம் இல்லாதது போல, வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.
"நூறு ரூபா எடுத்து வை ..இல்லேன்னா, சைக்கிள் கிடைக்காது"
நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். தம்பியிடம், நீ கொஞ்ச நேரம் இங்கேயே இரு....நான் போய் கார்த்திக் சைக்கிள் மார்ட் ஒனர கூட்டிட்டு வந்திடுறேன்...
"தம்பி நீ எங்கே போற? "
"இல்லன்னா...இப்ப வந்திடுறேன்...."
"சும்மா வராத...நூறு ரூபாயோடு வா....நிறைய வேலை இருக்கு "
கீழே குனிந்து, எவ்வளவு ரத்தம்.....ம்....
சைக்கிளின் பின் பக்கத்தில் இருந்த, எம்பலத்தை பார்த்து விட்டு, கார்த்திக் சைக்கிள் மார்ட்.....தக்காளி சைக்கிளா விடுறீங்க...என்றான்...
நான் பயந்து கொண்டே, சைக்கிள் கடையை அடைந்தேன்.
வாடா...மாமா...
எனக்கு ஏனோ ஸ்கூலில் அந்த பெயர்..
சைக்கிள் எங்கே?
ஒரு நிமிடம் செலவழித்து விட்டு, எல்லா விவரங்களையும் சொன்னேன்.
"அந்த குடிகாரன் சைக்கிளை விட மாட்டேங்கிறான்...என் தம்பி மேல எந்த தப்பும் இல்ல."
கார்த்திக் அண்ணனுடன் திரும்பி வரும் பொழுது, தம்பியும், சைக்கிளும் மட்டும் இருந்தார்கள்.
"அந்த ஆளு எங்கேடா?"
"வேற இன்னொரு ஆளு வந்த உடனே போயிட்டாரு...."
"சரி, வண்டியை எடு...."
சரிந்திருந்த ஹாண்டில் பாரை அங்கேயே சரி பண்ண முடிந்தது.
"இது என்ன?"
சைக்கிளில் அந்த குடிகாரனின் சட்டை கிழிசல்.
"அந்த ஆளுக்கு ஏதாவது பணம் கொடுத்தீங்களா?"
"இல்ல "
"இனிமேயும் கொடுக்காதீங்க "
 "நல்ல பசங்கடா.....மெயின் பஜார்ல ஓட்டாதீங்க...வேகமா போகாதீங்க...."
வரும் வழியில் நிறைய அறிவுரைகள் கிடைத்தது.
அடுத்த சில நாட்களுக்கு அடக்கி வாசித்தோம். சந்துகளில் ஒட்டினோம். வயசானவர்கள் வந்தால், பிரேக் அடித்து சென்றோம்.
கிட்டத்தட்ட, அந்த முதல் நாள் சைக்கிள் அனுபவம்  எங்கள் நினைவில் அழியத்தொடங்கியது.
அன்று ஸ்கூல் முடிந்து, வீட்டிற்கு திரும்பும் வழியில் ஏதோ ஒரு சவ ஊர்வலம் கடந்து சென்றது. ஜாக்கிரதையாக சாலையில் கிடந்த எந்த பூவையும் மிதிக்காமல், ஒதுங்கி நின்ற பொழுது, கார்த்திக் அண்ணன், வெற்றுடம்போடு பானையில் நெருப்போடு எல்லாருக்கும் முன்னால் நடந்து செல்வது தெரிந்தது.
நான் உடனே, ஒரு ஆர்வத்தில், சவத்தை பார்த்தேன்.
அதே குடிகாரன்....

No comments:

Post a Comment