Tuesday, August 30, 2016

காவல் வேலி

எனக்கு என்னமோ இப்ப நடக்கறது எதுவும் பிடிக்கல..."என்றாள் மரகதம். கையில் பாதி வழிந்தோடும் மாவு.
"ப்ரீத்திக்கிட்ட எப்ப பேசினீங்க? "
பாதி ஷேவிங்கில் இருந்தவன், காபி ரெடியா? என்றான் .
"நான் என்ன சொல்றேன்...நீங்க என்ன சொல்றீங்க ...ப்ரீத்திகிட்ட பேசினீங்களா இல்லையா?"
"லுக் மரகதம்......ப்ரீத்தி நம்ம பொண்ணு.....நம்பித்தான் ஆகணும்......"
"அவ நம்ப பொண்ணுதான்.....ஆனா, அவ வயசுன்னு ...."
"ஸ்டாப்.....வயசு பொண்ணு....வயத்துல நெருப்பு கட்டிட்டு இருக்கேன்...அதுதானே....நான்சென்ஸ் " என்றான்....
ஹாய் டாட் என்று வந்த மகளை பார்ப்பதற்கு அம்மாவின் ஜாடை. ஒரு நிமிடம் கண்களில் ஏதோ ஒரு துரோகத்தை தேடினான். ஹ்ம்ம்.....சான்ஸே இல்லை....
அப்பா....கழுத்தை கட்டிக்கொண்டாள்.....
முதல்ல மேல இருந்து கை எடு என்றாள் மரகதம்.....
நாங்க எல்லாம், அப்பா எதிர்ல கூட நின்னது இல்லை....
அவ ஓல்ட் ஏஜ்...நீ சொல்லு டார்லிங்....என்று கன்னத்தில் தட்டினான்.......
அப்பா....ஸ்கூல்ல ஒரு பிக்னிக் ஏற்பாடு பண்ணியிருக்காங்க....கொடைக்கானல்......போகணும்....
அதெல்லாம் ஒன்னும் வேணாம்......வீட்டில இருந்து சமையல் கத்துக்க...என்றாள் மரகதம்.
வாட் இஸ் திஸ்? அம்மா என்ன ரொம்ப கண்ட்ரோல் பண்றப்பா.....என்னுடைய ம்யூசிக் க்ளாஸ் கட் ....யோகா...கட்....வெளிய போகக்கூடாது.....சிரிக்கக்கூடாது...பிரண்ட்ஸ் இருக்க கூடாது....குறிப்பா பாய்ஸ்....கம் ஆன்....நம்ம இருக்கறது பதினெட்டாம் நூற்றாண்டான்னு சந்தேகம் வருது...
பெரியவங்க சொன்னா அதுல ஆயிரத்தெட்டு அர்த்தம் இருக்கும்....அதெல்லாம் உங்க நன்மைக்குத்தான்.....என்றாள் மரகதம்......
அம்மா.....நீ எல்லாத்தையும் எமோஷனலா பார்க்கிற அதுதான் பிரச்சனை ....
பிரச்சனை இதுதான்.
மாதவன் ஒரு சிவில் என்ஜினீயர். பெரிய பெரிய அபார்ட்மெண்ட்கள் அவன் கைவண்ணத்தில் உருவானவை.. சென்னை, பாம்பே இப்படி. ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் இடம் மாற்றம் நிச்சயம். மாதவனின் ஒரே பெண் ப்ரீத்தி. மூன்றாவது வரை அஸ்ஸாமிலும், கொஞ்சம் ஜார்கண்டிலும், டெல்லியிலும் படித்து விட்டு, பிளஸ் டூ விற்க்காக திருச்சி வந்திருப்பவள்.
இயல்பிலேயே தைரியமான பெண் ப்ரீத்தி. மாதவன் தன் பெண்ணை, சராசரிக்கும் அதிகமாக சுதந்திரம் கொடுத்தே வளர்த்தான். தனியாக ஷாப்பிங் செய்வது. பைக் ஓட்டுவது. கராத்தே இப்படி.
இதனை மரகதத்தால் பல நேரத்தில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. குறிப்பாக பாய் பிரண்ட்ஸ் இருப்பது அவள் மனதில் உறுத்தியது.
"எங்க காலத்தில பசங்க கூட நாங்க பேசவே மாட்டோம்....இப்ப என்னடான்னா, ஒவ்வொருத்தன் தைரியமா வீட்டுக்கே வரான்.....இவரும் அத பத்தி கண்டுக்கறதே இல்லை....இதெல்லாம் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிஞ்சுடணும்......பேப்பரை பாருங்க....எத்தனை காதல் தற்கொலைங்க....ரேப்....கேக்கவே அசிங்கமா இருக்கு....
ஏண்டி...அந்த மாதிரி நினைப்பு இருந்தா இப்பவே அத அழிச்சுடு... உன்னை என் அண்ணன் பையனுக்குத்தான் கொடுக்க போறேன்.......
யாரு விசுவா? சிரிப்பா இருக்குமா......அவனுக்கு தெரிஞ்சா ரொம்ப காமெடியா இருக்கும்பாம்......எங்க ரெண்டு பேருக்கும் அந்த மாதிரி எண்ணம் கிடையாது....நீங்களே அப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்கன்னா நாங்க என்ன செய்ய முடியும்.....அது உங்க தப்பு....
கேட்டீங்களா.....சின்ன பொண்ணு, சின்ன பொண்ணும்பீங்களே....எவ்வளவு தெளிவா பேசறா? இவளுக்கு போயி பரிஞ்சு வறீங்களே.....ஒரு நாள் இல்ல, ஒரு நாள் யார் கூடயாவது மாலையும் கழுத்துமா வந்து நிப்பா....இந்தாடி, அப்படி ஒரு எண்ணம் இருந்தா இப்பயே அழிச்சுடு...........என்றாள் மரகதம்...
ப்ரீத்தி ஸ்கூலிற்கு சென்றதும் சதியாக மாதவனை உள் ரூமிற்குள் அழைத்து சென்றாள்.
இத பாருங்க....பரண் மேல் ஏறி, உள்ளே இருந்து அந்த க்ரீட்டிங்ஸ் கார்டை எடுத்து காண்பித்தாள்.
வித் லவ் ஆல்வேஸ் பரணி.....நிறைய ஆர்ட்ஸ் சிம்பல்கள்.
பன்னிரெண்டாவது படிக்கிற பொண்ணுக்கு வர லெட்டரா இது.
இத பாருங்க......கம்ப்யூட்டரில் பேஸ் புக். திறந்தாள்.
ப்ரீத்தியின் பாஸ்வார்ட் இவளுக்கு எப்படி தெரிந்தது?
நிறைய நண்பர்கள். பெரும்பாலும் ஆண்கள்.
நீங்க உங்க பொண்ண அளவுக்கு அதிகமா நம்பறீங்க.....என்றாள்....
 நமக்கு இருக்கறது ஒரே பொண்ணு....இவ ஏதாவது தப்பான வழிக்கு போயிடுவாளோன்னு பயமா இருக்குங்க.....என்று அழ ஆரம்பித்தாள்.
சரி, சரி...அழாதே...நான் பார்க்கறேன்....
கண்ணை துடைத்து கொண்டு, "நான் சொன்ன மாதிரி சொல்லாதீங்க" என்றாள்.
ப்ரீத்தியை சாயந்திரம் சினிமா கூப்பிட்டதற்கு மறுத்து விட்டாள். நிறைய ஹோம் ஒர்க் இருக்குப்பா....ஜெகன் வரேன்னு சொல்லியிருக்கான்.....குரூப் ஸ்டடி பண்ணனும்....
சரி....மொட்டை மாடிக்கு வா...கொஞ்ச நேரம் பேசலாம்....
சம்திங் பிஷி...அம்மா என்னை பத்தி ஏதோ போட்டு கொடுத்துட்டாளா
-அதெல்லாம் ஒன்னும் இல்லை.
மாடியில் ஏகாந்தம். தூரத்தில் ஸ்ரீரங்கம் கோபுரம் தெரிந்தது.
மரகதம் தள்ளி நின்றாள். வேப்ப மரக்காற்று தழுவி சென்றது.
நேரடியா விஷயத்துக்கு வரேன் ப்ரீத்தி....யு நோ மீ....இது வரைக்கும் நான் எந்த விஷயத்துலயும் உன்னுடைய விருப்பத்துக்கு மாறா நடந்தது இல்ல...பட் யு நோ...இந்த வயசு....கொஞ்சம் சிக்கலான வயசு....உனக்கு பாய் பிரண்ட் இருக்கறத பத்தி நான் ஒன்னும் சொல்லல. ஆனா, அது பிரண்ட்தானா அப்படிங்கற சந்தேகமும் கூட வரத தடுக்க முடியல...அந்த க்ரீட்டிங்ஸ் அம்மா காண்பிச்சா....யாரு பரணிங்கறத பத்தி எனக்கு கவலை இல்ல...பட், இது முடிவெடுக்கும் வயசு இல்ல....அது மட்டும் இல்லாம, உன் அகடெமிக் பேரஃஆர்மன்சும் குறைஞ்சுகிட்டு வருது....சோ, இன் டோட்டல், யு ஷுட் நாட் கெட் டைவர்ட்டட்.......
சொல்லி முடிச்சிடீங்களா அப்பா? நான் பேசப்போறது எனக்கு மட்டும் இல்லப்பா...ஒட்டு மொத்த பெண்களுக்காகத்தான். என்ன சொன்னீங்க.....அந்த க்ரீட்டிங்ஸ் கார்ட்...வெல்....அது எனக்கு வந்தது......நான் அந்த பையனுக்கு ஏதாவது கார்ட் திருப்பி கொடுத்தேன்னு தெரியுமா? இப்ப வீட்டில சொல்லிருந்தா, என்ன ஆயிருக்கும்...அம்மா அந்த பையன் யாரு, என்னனு துருவி, எடுத்திருப்பா.....அதனால, ஸ்பாயில் ஆறது அந்த பையன் மட்டும் இல்ல...என் லைஃபும் தான்....இவ என்ன பண்ணினாளோன்னு ஊர் பேசும்...இது போபால் இல்ல...ஸ்ரீரங்கம்....இங்க இந்த ஊருக்கு தகுந்த மாதிரி தான் வாழ்ந்தாகணும்...எனக்கு இங்க ஏன் இத்தனை பாய் பிரண்ட்ஸ் தெரியுமா? ஒரு பாதுகாப்புக்குத்தான். ஒரு பையன பார்த்தவுடனே அவன் நல்லவனா, கெட்டவனாங்கற ஊகிக்கற சக்தியை கடவுள் பெண்களுக்கு கொடுத்துருக்காரு...பெரும்பாலான பசங்க, பிரண்டுன்னு சொன்னாலும், சந்தர்ப்பம் கிடைச்சா எங்களை பயன்படுத்தத்தான் பார்க்குறாங்க...கொஞ்சம் சிரிச்சா, காதல்ன்னு நினைச்சுக்கறாங்க.
எங்க பசங்க இல்லை சொல்லுங்க? யோகா க்ளாஸ் ஜாயின் பண்ணினேன்.....அங்க பத்து பேரு, உங்க பேரு என்ன...ஊரு என்ன...உங்க நம்பர் சொல்லுங்க....அடுத்த நாளே, காதல் வசனங்கள் அனுப்ப ஆரம்பிக்கிறாங்க....கம்ப்யூட்டர் க்ளாஸ் போனாலும் இதே தொல்லைதான். எங்க போனாலும் இவங்க கிட்டேயிருந்து தப்பிக்க முடியாது....எத்தனை இடத்துக்கு நீங்க பாடிகார்டா வருவீங்க....மொதல்ல, இவங்க கிட்டேயிருந்து எங்களை காப்பாத்திக்கணும்னா, அது பலத்தால முடியாது. டெல்லில ஒரு பெண்ணை ஓடுற வண்டில கற்பழிச்சாங்களே, அந்த ரோடில் போன ஜனங்க என்ன பண்ணிட்டிருந்தாங்க....பாம்பேல ஒரு பொண்ண, முப்பது பேர் நடு ரோடில் கற்பழிச்சாங்களே, அத யார் தடுத்தா? ஆண்களை உடல் பலத்தாலே பெண்களாலே எதிர்க்க முடியாது. ஆனா, மனோ பலத்தாலே  முடியும். நாங்க ஒரு ஆண் கிட்ட பிரண்டா பழகினா, அவனை சுத்தி இருக்கிற அத்தனை பெரும் ஒதுங்கிடுறாங்க.....அவன் கடைசி முடிக்கும் நாங்க பிரண்டா நினைக்கிறோமா, காதலிக்கிறோமான்னு தெரியாம குழம்புவான்.....அந்த ஒருத்தனை வச்சுதான் மத்தவங்கள எங்களால எதிர்க்க முடியும்...என்னிக்கு வேணா, அறுந்துடுங்கற பயத்துலதான் அந்த பையனும் கண்ணியமா நடந்துக்கறான் .....ஒரு முறை.....ஒரே முறை, பெண்கள் கவுந்துட்டாங்கன்னா, அப்புறம் அவங்கள மீட்கறது கஷ்டம்.....
இன்னிக்கு இருக்கற எல்லா பெண்களுக்கும் ஏதோ ஒரு பாய் பிரண்ட் இருக்கறதா உலகமே தப்பா பேசுது....ஆனா, அதுக்கு பின்னாடி எவ்வளவு பெரிய காரணம் இருக்குங்கறது யாருக்காவது தெரியுமா?
ஒரு இடத்தில பத்து பசங்க இருந்தாங்கன்னா, அதுல ஒருத்தன் கூட க்ளோசா இருந்தா, ஆட்டோமாட்டிக்கா மீதி இருக்கறவன் நம்மள டிஸ்டர்ப் பண்ண மாட்டான்.....அவனுங்களே ஏதேதோ நினச்சுக்குவாங்க...
எங்க திறமை எல்லாம், அந்த பத்து பேர்ல யாரு உபத்திரவம் இல்லாதவன்னு தேர்தெடுக்கருதுலதான் இருக்கு. மொக்கையா எல்லா இடத்திலேயும் ஒருத்தன் இருப்பான்.
இது உங்க காலம் இல்லப்பா....ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டியிருக்கு....என்றாள்.....
மரகதம் கொஞ்ச நேரம் கழித்து, "சரி கீழே வா....ஜெகன் வர நேரம் ஆச்சு..." என்றாள்.

Sunday, August 21, 2016

இவர்களும் இந்தியர்கள்

கொலை செய்வதும் , கொள்ளை செய்வதும்  கலை
- மந்திரி குமாரி வசனம்
கொலை எப்படி கலையாகும்?
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு, பாய்ந்து சென்று மரத்தில் இருக்கின்ற பருந்தை கொல்கிறது. அங்கு வில்வித்தை என்கிற பெயரில் கொலை கலையாகிறது.

கண்ணுச்சாமியை நீங்கள் சந்திக்க வேண்டுமானால், உடனடியாக அடையார் எல் பி ரோடிலிருந்து இந்திரா நகர் திருப்பத்தில் சினிமா இன்ஸ்டிடியூட் பாலத்துக்கடியில்  (அநேகமாய் உங்கள் பார்வைக்கு படாத) கிட்டத்தட்ட நூறு குடிசைகள் இருக்கின்ற சேரியில், ரெயில்வே க்ராஸ்ஸிங் அருகே மூணாவது குடிசையில் பார்க்கலாம்.
கூவத்தின் கிளை நதியாக பிரவேசம் செய்கின்ற அந்த "காவாயை" கடந்தால், கொஞ்சம் மூக்கைப் பொத்திக் கொண்டா ல் உள்ளே நுழையலாம்.
உள்ளே எம் ஜி ஆர், அண்ணா படங்கள். கேலண்டரில் ஜீசஸ். கூடத்தை தடுத்து ஒட்டிய கிச்சனில் சில்லறை சமையல் பாத்திரங்கள்.
கண்ணுச்சாமியின் தொழில் இந்திய பீனல் கோட் செக்ஷன் 378, 379 ஆல் மூன்று வருடம் வரை தண்டிக்கப்பட சாத்தியம் இருக்கின்ற சில்லறை திருட்டு.
கண்ணுச்சாமியின் ரிஷி மூலம் அத்தனை ஆரோக்கியமானது இல்லை. பிறந்த ஊர் அநேகமாய் கடலூராக இருக்கக் கூடும். ஏனென்றால், அங்குதான் ஏதோ ஒரு புதரில் கண்டெடுத்தார்கள். முதலில் உலகத்தில் பார்த்தது, பாதர் வில்லியம்ஸ். ஐந்து வயது வரை அங்கே பராமரிக்கப்பட்டு, (கீழே இருந்த பிஸ்கட் துணுக்கை சாப்பிட்டதற்காக ஆயா அம்மா சுட்ட வடு தொடையில் இன்னும் இருக்கிறது)  சென்னை சைதாப்பேட்டைக்கு  மாற்றப்பட்டு, ஐம்பது வருடம் இருக்கும். சென்னைதான் எல்லாம் கற்றுக்கொடுத்தது. ஏமாற, ஏமாற்ற.
இன்னிக்கு எங்க டூட்டி என்றாள் பொன்னம்மா. அணிந்திருந்த நைட்டியில் ஆங்காங்கே இருந்த கிழிசலை சாமர்த்தியமாக ஒட்டுப் போட்டிருந்தாள்.
இங்கேதான் பக்கத்துல.....
கண்ணுச்சாமி எப்பொழுதும் இடத்தை சொல்வதில்லை. அது தொழில் ரகசியம்.
ஒரு இடத்தை "ஆராமாக" தேர்ந்தெடுக்க குறைந்தது பத்து நாட்கள் ஆகும். முன்பு மாதிரி இல்லை. வயசாகி விட்டது. வலு கொஞ்சம் குறைந்துவிட்டது. கண்களில் அநேகமாய் புரை விழுந்து, சினிமா ஸ்கொப் மாதிரி பாதிதான் தெரிகிறது. அதற்குள் அத்தனை லாவகம். மிரட்டல், கவர்தல், பதுங்குதல்.
கண்ணுச்சாமி தொழிலுக்கு கிளம்பும்பொழுது இரவு பனிரெண்டுக்கு மேல். நீங்கள் பேப்பர் படிப்பவரானால் தெரிந்திருக்கும். இந்த மாதிரி தொழிலுக்கு ஏற்ற சமயம், விடிகாலை இரண்டிலிருந்து, நான்கு. அப்புறம் உலகம் வேகமாய் விழித்துக் கொள்ளும்.
லெதர் பேக் மாதிரி இருந்த பைக்குள் தொழிலுக்கு தேவையான சாமான்கள் ரெடி. கயிறு, கத்தி, முகத்தை மறைக்க முகமூடி, கொத்து சாவிகள், டார்ச் லைட், குருவிடம் வாங்கிய பழைய ரிவால்வர். (சியப்பா ரினோ).
கிளம்பும்பொழுது ஒரு முறை ஜீசஸ் படத்தை பார்த்து கும்பிட்டு விட்டு, கதவை இழுத்து சாத்திக்கோ என்றான்.
பொன்னம்மாவுக்கு அன்றும் ஆஸ்துமா இரைச்சல் இருந்தது.
"யேசுப்பா..." என்றாள்.
கண்ணுச்சாமி இடத்தை ஏற்கனவே தேர்ந்தெடுத்திருந்தான். கொஞ்சம் அடையார் பக்கம் நடந்து, திருவான்மியூர் பக்கம் திரும்பி, தரமணி சாலையில் வேளச்சேரி போகும் வழியில் பேபி நகர் தாண்டி  கொஞ்சம் எக்ஸ்டென்சன் ஏரியாவில், ஏதோ ஒரு நகர். கொஞ்சம் வயசாளிகள் இருக்கின்ற வீடு.
நாய்கள் எதுவும் இல்லை. உள்ளே காம்பவுண்ட் தாண்டிக் குதிக்கும் பொழுது, புல்தரை. பின் பக்க ஹோஸ் பைப்பில் ஏறும் பொழுது இரண்டு முறை வழுக்கியது.
இது வரை ஆயிரம் திருட்டுக்கள் நடத்தியிருப்பான். முதல் திருட்டு பசிக்கு ரொட்டி திருடியது.
ஐயோ...அம்மா அடிக்காதீங்க...அப்பா அடிக்காதீங்க....
போலீஸ் அடியில் அம்மாவை நினைத்து கண்டபடி திட்டினான்.
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான். அங்குதான் அவன் தொழில் திறமைகள் முறையாக்கப் பட்டன.
"முதல்ல யாரவது ஒரு ஆள அடிக்கணுமா, கன்னத்திலே வுடு.......அப்புறம் மாரிலே....."
"எப்பேர்ப்பட்ட பூட்டையும் உடைக்க ட்ரிக் இருக்கு தெரியுமா? "
கண்ணுச்சாமி சிறுவர் சீர்திருத்த பள்ளியை விட்டு வெளியே வரும் பொழுது, திருட்டின் மொத்த பரிமாணமும் தெளிந்து வெளியே வந்தான்.
கண்ணுச்சாமி பூட்டு திறப்பதில் நிபுணன். எத்தகைய கஷ்டமான எலெக்ட்ரானிக்ஸ் லாக்கையும் உடைத்திருக்கிறான். இந்த ஐம்பது வருட அனுபவத்தில் போலீசில் ஒரு முறை கூட மாட்டிக் கொண்டது இல்லை.
மொட்டை மாடியில் மாங்காய் உலர்த்தியிருந்தார்கள். அநேகமாய் அய்யர் ஜாதியாய் இருக்கும். அவர்களுக்குத்தான் இந்த மாதிரி எல்லாம் தெரியும்.
கதவு திறந்து, நிதானமாய் படியில் இறங்கினான். இதே வீட்டிற்கு ஒரு முறை பழைய பேப்பர் காரனாகவும், சேல்ஸ் ரெப்பாகவும், அநாதை ஆசிரமத்திலிருந்து வருவதாகவும் வந்திருக்கிறான். முதல் ரூமில் ஒன்றும் இல்லை. இரண்டாவது ரூமிலிருந்துதான் பணம் எடுத்துக் கொண்டு வந்தார் அந்த வயசாளி.
அவர்களை நோட்டமிட்டிருக்கிறான்.
இவன் அளவுக்கு வயசான ஆள். மற்றும் அவன் மனைவிதான் வீட்டில். பையன் ஏதோ ஒரு வெளிநாட்டில் இருக்க வேண்டும். வீட்டில் எல்லா சவுகரியங்களும் இருப்பதை பார்த்திருக்கிறான்.  ரெப்ரிஜிரேட்டர், டிவி, ஏசி, கம்ப்யூட்டர்.
போன முறை இடம் பார்க்க வந்த பொழுது, அம்மா ...கொஞ்சம் தண்ணி தாங்கம்மா என்றான்.
கழுத்தில் ஐந்து பவுன் தேறும். கை பற, பற வென்றது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். நோ வயலன்ஸ்.
உள்ளே மாஸ்டர் பெட் ரூமில் அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. எங்கேயோ யார் வீட்டிலோ, எப் எம் விடாமல் பாடிக் கொண்டிருப்பது சன்னமாகக் கேட்டது.
முதலில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையின் வெளிப்பக்கம் தாழ் போட்டான். பின் நிதானமாக, முதல் ரூமில் நுழைந்து, பீரோவை நெருங்கினான்.
பழைய பீரோ. மாஸ்டர் பஞ்சை எடுத்து, சாவியை சரி பார்த்து, நான்காவது முயற்சியில் திறந்தது. லாக்கரில் உள்ளே இருந்த பணக்கட்டை எடுத்துக் கொண்டான். குறைந்தது ஐம்பது தேறும். மூன்று மாதம் ஓட்டலாம். பொன்னம்மாவிற்கு மருந்து வாங்க வேண்டும். கண்ணிற்கு ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும்.
அவர்கள் இன்னமும் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.
நோ வயலன்ஸ். இந்த தொழிலில் ரத்தம் சிந்துவது கண்ணுச்சாமிக்கு பிடிக்காது. பொன்னம்மாவை பார்த்த நாள் ஞாபகத்திற்கு வந்தது. பொன்னூஞ்சல் படம் பார்த்து விட்டு, பிராந்தி குடித்து விட்டு, எழுபதாம் வருடம் இருக்கும். மோர்ஸ் பாலத்திற்கு அடியில் பெண்ணிற்க்காக காத்திருந்த பொழுது, ஆட்டோவில் திடீரென்று ஐந்தாறு பேர் பொன்னம்மாவை கிட்டத்தட்ட தள்ளி விட்டு சென்றார்கள். சந்தேகத்திற்கு இடமில்லாமல், கற்பழிக்கப்பட்டிருந்தாள்.
அவளை குடிசைக்கு கூட்டி வந்து, காப்பாற்றி.....எத்தனையோ முறை யோவ் இந்த புழைப்பு வேணாம்யா....இத்தனை நல்லவனா இருக்க...பேசாம வேற ஏதாவது ஜோலி பாரு என்றிருக்கிறாள்.
ம்ஹ்ம்.......திருட்டில் உள்ள சுவாரசியம் எதிலும் இல்லை. கொஞ்ச நாள் ரிவிட் அடித்து பார்த்தான். பெட்டிக்கடை வைத்து பார்த்தான். எதுவும் வேலைக்காக வில்லை. எல்லா இடங்களிலும் போலீஸ் வந்து நின்றது. மாமூல் இல்லாமல் எந்த தொழிலும் இல்லை. திருட்டு உட்பட. ஆனாலும், இது வரை கண்ணுச்சாமியின் பெயர் எந்த ஸ்டேஷனிலும் வராததே, சாதனைதான்.
படி ஏறும்பொழுது, கொஞ்சம் தள்ளியது. பசி. கொஞ்சம் சுதாரித்து பார்த்தான். காற்றில் கால்  அலைப்பாய்ந்து, ஏதோ ஒரு பொருளில் மோதி,
யாரு?
உள் ரூமில் விளக்கெரிந்து, அய்யயோ திருடன்.......
கத்தாதீங்க...முகமூடி அணிந்து கொண்டான். கையில் புதிதாய் முளைத்த ரிவால்வர்.
நான் கிளம்பறவரை, சத்தம் போடக்கூடாது.
உள்ளே பயந்திருப்பது தெரிந்தது. பயம்தான் அங்கே மூலதனம்.
சத்தம் போட்டீங்க, சுட்டுடுவேன்....ஜன்னல் வழியாக துப்பாக்கியை காண்பித்தான்.
கிளவுஸ் அணிந்து கொண்டான்.
பிரிட்ஜை திறந்தான். பால் இருந்தது. கொஞ்சம் குடித்தான்.
மொபைல் அடிக்கும் சத்தம். சே...இந்த சனியனை வீட்டில் வைக்க மறந்து விட்டோமே?
லைனில் பொன்னம்மா....
ஏங்க....என....எனக்கு ....ரொம் ....ரொம்ப மூச்சேறைக்குது....உடனே வாங்க...
இப்ப வந்திடுறேன்.....
செல் போனை அணைத்து விட்டு, மீண்டும் துப்பாக்கியை அவர்களிடம் காண்பித்து விட்டு, மாடி வழியாய் இறங்கினான்.
தெரு நாய் குறைத்தது. பொன்னமாவிற்கு ஒன்னும் ஆயிருக்காது. அடிக்கடி வரும் இரைப்புதான். முகமூடியை கழட்டி விட்டு, மெய்ன் ரோடு வரை நடந்து சென்று, அதிகாலை பஸ்ஸில் ஏறிக்கொண்டான். பணம் பையில் பத்திரமாக இருந்தது. சென்னை விடியத்தொடங்கியது.
வீட்டுக்கு திரும்பும் பொழுது, வாசலில் கூட்டமாக இருந்தது. ஏன்? என்ன ஆச்சு?
பக்கத்து குடிசை மாரிதான் எதிரில் வந்தான்.
நீ எங்க போய் தொலைஞ்சே? பெரியம்மாவுக்கு மூச்சிரைச்சு கண் சொருகிடுச்சி,...பெரியாஸ்பத்ரிக்கு இட்டுக்கினு போயிருக்காங்க.....
ராயபேட்டையா?
இல்ல சென்ட்ரலாண்ட
21 பிடித்து அலறிக்கொண்டு சென்ட்ரலில் இறங்கி கொண்டான். பெரியாஸ்பத்திரி அந்த அதிகாலை வேளையிலும் பிஸி ஆக இருந்தது.
எமெர்ஜென்சி வார்டில் பொன்னம்மா கிழிந்த நாராக இருந்தாள். தலை கலந்திருந்தது. செயற்கை மூச்சு வைத்திருந்தார்கள்.
டாக்டர் எட்டு மணிக்குத்தான் வருவாராம். டூட்டி டாக்டர் சிடு, சிடு வென விழுந்தார். யோவ்...பேசாம அங்கே போய் உக்காருயா....இப்பத்துக்கு ஒன்னும் சொல்ல முடியாது......பெரிய டாக்டர் வந்து பாக்கணும்....
எட்டு மணிவரை காத்திருந்தான். பெரிய டாக்டர் வந்து, ரெண்டு நாள் ட்ரீட்மென்டில் சரியாகி விடும். என்றார்.
கீழே சாதா வார்டுக்கு மாற்றப்பட்டாள் பொன்னம்மா....விழிப்பு வந்ததும், யோவ் நீ சாப்பிட்டாயா? என்றாள்.....
கண்ணுச்சாமி கண்களில் காத்திருந்த கண்ணீர் மடை திறந்து, கன்னங்களில் வழிந்தது.
யோவ்...எதுக்கியா அழுவற? நாந்தா பொழைச்சுகிட்டேன் இல்லே?
டிபன் வாங்க வெளியே வந்த பொழுது, கண்ணுச்சாமியை போலீஸ் அரெஸ்ட் செய்தது.  செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்து விட்டார்கள்.
கண்ணுச்சாமிக்கு இன்னும் நம்பிக்கை இல்லை. இத்தனை வருட அனுபவத்தில் மாட்டிய அனுபவம் எதுவும் இல்லை.
அடையார் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளமையாக இருந்தார்.
எத்தினி வருஷம் டிமிக்கி கொடுத்துருக்கே பெரியவரே.....நல்லா மாட்டிக்கினியா? சாவுற வயசில ஏன்யா சாவடிக்கிற?
முதல் நாள் கொள்ளை அடிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் மற்றும் மனைவி ஸ்டேஷனில் காத்திருந்தார்கள்.
இவன்தான்....என்றதும் முதல் அறை கன்னத்தில் விழுந்தது....
வேண்டாம்...வேண்டாம். என்று அவர்கள் பதறும்பொழுது, நீங்க போங்க...நாங்க பார்த்துக்குறோம்....என்றது காவல் துறை.
இரண்டு நாள் கண்ணுச்சாமிக்கு அவ்வப்பொழுது அடிகளும், பிரியாணிப் பொட்டலமும் கிடைத்தது. பொன்னம்மா என்ன ஆனாள்? என்று தெரியவில்லை.
மூணாவது நாள் சாயந்திரம் விடுதலை செய்தார்கள்.
இன்ஸ்பெக்டர் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.
உன் வயசுக்காக அவங்க கேச வாபஸ் வாங்கி இருக்காங்க...இன்னொரு முறை இப்படி ஏதாவது பண்ண....அப்படியே சாவடிச்சுடுவேன்...
வீட்டிற்கு திரும்பும் பொழுது, பொன்னம்மா இருந்தாள். இவனை பார்த்ததும் அழுதாள். எத்தனை அடி? நமக்கு ஏன்யா இந்த பொழைப்பு? என்றாள்....
நமக்கு கால, காலத்துல ஒரு குழந்தை இருந்தா இப்படி நடக்குமா? அந்த பாவிங்க நாலு பேரு செஞ்ச பாவத்துக்கு, என் கர்ப்பப்பை பலவீனமாய் குழந்தையை தாங்கற சக்தியை இழந்திடுச்சி....
கண்ணுச்சாமி ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். தூரத்தில் பறக்கும் ரெயில் வேளச்சேரியை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிந்தது.
அவனுக்கு இதெல்லாம் ஏதோ ஒரு கனவு மாதிரி இருந்தது. யாருக்கோ ஏற்பட்டது மாதிரி. தான் பிறந்தது, வளர்ந்தது.....
இனிமே என்னய்யா செய்ய போறே? என்றாள் பொன்னம்மா......
"தொழிலுக்கு போகும்பொழுது செல்போனை வீட்டிலியே வச்சிட்டு போயிடுறேன்...." என்றான்.

Thursday, August 18, 2016

மீண்டும் ஒரு காதல் கதை

இந்த கதையை படிக்கப் போகிற உங்களை விட, எனக்கு அமித்தையும், பூஜாவையும் மிக அந்தரங்கமாகத் தெரியும். அநேகமாக, அவர்கள் காதல் தொடங்கிய நாளிலிருந்து.
நான்?
பெயர் ஸ்ரீனிவாச கோபாலன் சுருக்கமாக சீனி. பிறந்தது சென்னை. அப்பா ஆர்மியில் இருந்ததால், கொஞ்ச நாள் ஸ்ரீநகரிலும், சிரபுஞ்சியிலும் (அங்கும்  தண்ணீர் கஷ்டம் உண்டு), போபாலிலும் வெண்ணை, சப்பாத்தியோடு வளர்க்கப்பட்டவன். சன் டி வியின் உபயத்தில் தத்தி தத்தி தமிழ் படிப்பவன். பேசுபவன்.
முதலில் நான் அந்த ரகசிய திட்டத்திற்கு உடன்படவில்லை. ஆனால், என் வாழ்க்கையில் இந்த மாதிரி சாகசங்கள் நிறைந்திருப்பதை உள்ளூர விரும்பி இருக்கிறேன். ஸ்ரீநகரில் இரண்டு அடியில் ப்ளண்டர்பஸ் கன்னை சந்தித்திருக்கிறேன். இரண்டு முறை கன்னி வெடியிலிருந்து தப்பித்திருக்கிறேன். பாராமுல்லா பகுதியில் பனியில், ரோந்தில், வேண்டாம். உங்களுக்கு தூக்கம் வரும்.
இப்போது நான் வந்திருப்பது, மிக மிக ரகசியமான காரணம். இதில் தேசப்பற்றோ, சேவையோ கிடையாது.
யாரும் இல்லே.....என்றான் அமித்.
கிட்டத்தட்ட மரத்தின் உச்சியில், பச்சோந்தி மாதிரி கலரில் ஒரு டிரஸ் அணிந்திருந்தான்.
அவன் கையில் இரவில் ஊடுருவிப் பார்க்கும் பைனாகுலர். எங்களுக்கு எதிரே தெரிந்த பெரிய பங்களாவில் உள்ளே இருப்பவர், எங்களுக்கு முக்கியம் அல்ல. நாங்கள் செய்ய வேண்டியது ஒரு பொருளை எடுத்து வரவேண்டும்.
எங்களின் இருபது வயதிற்கு இது கிட்டத்தட்ட சாத்தியம் இல்லாத செயல். இருந்தாலும், அமித்தின் காதல் தெய்வீகமானது என்று அவன் நம்புவதால், இந்த சிரமங்கள் எல்லாம். என்னைப் பொறுத்த வரை, காதல் ஹார்மோன்களின் விளையாடல்.
முதலில் எலெட்ரிசிட்டியை நிறுத்துவோம் என்றான்.
இது எங்கள் திட்டத்தில் ஏற்கனவே இருந்தது. பிள்டிங்கின் பின் புறம், எலெக்ட்ரிக் லைன் போகும் பாதை எங்களுக்குத் தெரியும். வரைபடத்தில் உள்ளது. அதை ஒரே சொடுக்கு. கும்மிருட்டில், மேல் மாடியின் அறையில்  அவரின் கட்டில் அருகே இருக்கும், டேபிள் டிராயரை சத்தமில்லாமல் திறந்து, உள்ளே இருக்கும் வஸ்துவை எடுத்து வர வேண்டும்.
நானும் அமித்தும் தெளிவாக முடிவு செய்திருந்தோம். பங்களாவை சுற்றிலும் நிறைய ரோந்து. எல்லாம் அப்பாவோடு வேலை செய்பவர்கள். எங்கள் நோக்கம், இவர்களை முறியடிப்பது அல்ல. முதலில் மின்சாரத்தை நிறுத்தி விட்டு, அந்த குழப்பத்தில் எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.
நாங்கள் சரியான இடத்திற்கு வந்து, அந்த ரெண்டு வயர்களை இணைக்கும் நேரம், ஷார்ட் சர்க்யூட்டில் பங்களா மின்சாரம் இழந்து பழைய ஹிட்ச்காக் படம் மாதிரி திகிலாக தெரிந்தது.
சக்சஸ் என்று நாங்கள் பங்களாவிற்குள் செல்ல முயலும்போது, அந்த பங்களாவிற்கு உள்ளே மட்டும் தனி கனெக்ஷன் இருப்பது தெரிந்தது. பங்களாவுக்குள் பிரகாசமாக வெளிச்சம் திடீரென்று ஒளிர்ந்தது. .
திட்டத்தின் முதல் தோல்வி.
பேசாமல் போய் விடலாம்....என் காதல் அம்பேல் என்றான் அமித்.
அவசரப்படாதே கொஞ்சம் யோசி என்றேன்.
எனக்கு இந்த சாகசம் உள்ளூர பிடித்திருந்தது. ஆர்மி ஜெனரல் வீட்டில் ரகசியமாய் நுழைந்து, அவரின் செல்ல பேனாவை திருடிக் கொண்டு வருபவது என்பது அத்தனை சாதாரண விஷயமா?
அதுவும் பத்து பைசாவிற்கு பெயராத நண்பனின் காதலுக்கு...
"எல்லாம் பூஜாவின் பிடிவாதம் " என்றேன்
"ஒண்ணும் பண்ண முடியாது.....அவளிடம் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன். அவள் சொன்ன மாதிரி, அவள் அப்பாவின் குவார்ட்டர்ஸில் இருந்து, அந்த பேனாவை கொண்டு வராவிட்டால் என்ன, இங்கேயே டார்ஜிலிங் ஒரு முறை அழைத்து சென்று, ஒரு இரவு நேரத்தில் அவளை சரி செய்து காட்டுகிறேன். " என்றான்.
உனக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்றேன்.....
என் பார்வையை உணர்ந்து, அமித்தும் பங்களாவின் பின் பக்கம் பார்வையை செலுத்தினான்.
சென்டரி தனியாக இருக்க பிடிக்காமல், மேற்கு பக்கம் நகர, பின் வாசல் வழியாக உள்ளே நுழைய முடியும்.
பூஜாவும் அமித்தும் காதலர்கள். பூஜாவின் அப்பா ஆர்மி மேஜர் ஜெனெரல். அவரின் கீழ் என் அப்பாவும், அமித்தின் அப்பாவும் அதிகாரிகள். பூஜாவின் அப்பாவிற்கு இன்னும் காதல் விவகாரம் தெரியாது. அவரிடம் பேசும் அளவிற்கு அமித்திற்கு தைரியம் இருக்கிறதா என்று சோதிப்பதற்காக, இந்த ஸ்பெஷல் டாஸ்க். மேஜர் ஜெனெரலின் வீட்டிற்குள் நுழைந்து, மேல் அறையில் இருக்கும் அலமாரியில் இருக்கும் அவரின் பேனாவை சுட்டு வர வேண்டும். போட்டியில் ஜெயித்தால், பூஜா அவள் அப்பாவிடம் பேசுவாள். இல்லையென்றால் காதல் அம்பேல்.
இந்த கண்றாவி காதல் கதைக்கு நண்பனான நான் உதவப் போய்தான் இப்போது, பங்களா வாசலில் இருக்கிறேன்.
அந்த பங்களாவின் தோட்டம் முழுக்க ராணுவ தலைகள். பகல் நேரத்தில், இதே பங்களாவிற்கு நிறைய முறை அப்பாவோடு ஜீப்பில் வந்திருக்கிறேன். பகலில் வந்தால், மேலே போக முடியாது. நிறைய பாதுகாப்பு கவசங்கள்.
இந்த முறை, நாங்கள் பின் பக்கத்து கதவை கஷ்டப்பட்டு திறந்து புல் வெளியில் குதித்து, க்ரோட்டன்சில் மறைந்து, பங்காளவின் பின் பக்கத்தில் இருந்த ஜன்னலின் வழியாக குதித்து, தொபுக்
இதற்கு எத்தனை திட்டமிடல்கள். ஆர்மி ஜெனெரலை முதலில் எங்களின் ராணுவ காலேஜின் ஆண்டு விழாவில்தான் பார்த்தோம். எத்தனை குறிப்புகள்.
ஆர்மி ஜெனெரலை பற்றிய சிறு குறிப்புகள்
இடது கை பழக்கம் உள்ளவர், ஆறடி இரண்டு அங்குலம், ஷார்ட் சைட், தினமும் டைரி எழுதுபவர், நிறைய ஞாபக மறதிக்காரர் (காலேஜ் ப்ரின்சிபாலுடன் பேசும் பொழுது, மொபைலை ரூமில் வைத்து விட்டு வந்து விட்டார்). அவர் வீட்டில் இரண்டு பெட் ரூம்கள் இருக்கின்றன (அதில் எதில் தூங்குவார் என்று ஒரு மாதிரி யூகித்து விட்டோம். நேற்று ப்ரின்சிபாலுடன் பேசும் பொழுது, சாப்பிட்டவுடன் தூக்கம் வந்திடுச்சு..உடனே படுத்துட்டேன்...என்றார்.....எனவே கிச்சனுக்கு சமீபம் உள்ள பெட் ரூம்)
அந்த ரூமில் இருக்கின்ற இரண்டு அலமாரியில் அநேகமாய் இடது பக்க அலமாரியில்தான் பேனா இருக்கின்ற வாய்ப்பு அதிகம். ஏனெனில், அவர் இடது கைக்காரர்.....உஷ்....இது ஒரு சாம்பிள்.....இந்த மாதிரியான தகவல்கள் நிறைய சேமித்திருக்கிறோம்.
நாங்கள் அந்த பங்களாவுக்குள் நுழைந்ததை ஈ, காக்கா பார்க்கவில்லை. நாங்கள் படியில் சத்தம் போடாமல் ஏறி, அந்த பெட் ரூம் வாசலில் நின்றோம். எங்கள் சுவாசம் எங்களுக்கே மிக அதிக வால்யூமில் கேட்டது.
லேசாக கதவைத் திறந்து, உள்ளே அவரைப் பார்த்தோம். மேஜர் சீரான மூச்சு விட்டுக் கொண்டு, தூங்குவது தெரிந்தது. ஒரே நிமிடம். உள்ளே நுழைந்து, பேனாவை எடுத்துக் கொண்டு, அடுத்த சில நிமிடங்களில் பங்களாவின் பின் பகுதியில் இருந்தோம்.
அமித் உற்சாக மிகுதியில் கத்தினான். இந்த கதை இங்கேயே முடிந்து, சுபம் போட்டு விடலாம் என்று பார்த்தால் முடியவில்லை.
அடுத்த நாள் காலை, அப்பாவின் ஆபிசிலிருந்து அவசர அழைப்பு.
மேஜரின் வீட்டில் யாரோ நுழைந்திருக்கிறார்கள். பேனாவை திருடியிருக்கிறார்கள். பின் பக்கம் வழியாக வந்திருக்கிறார்கள். காரணம், பின் பக்க கதவின் தாழ்ப்பாள் திறந்திருக்கிறது.
சே...நாங்கள் மறந்து போன விஷயம்.
அப்பா கோபமாக கிளம்பி போனார். நீயும் வருகிறாயா? என்றார். நானும் தொத்திக் கொண்டேன்.
இந்த முறை வாசல் கேட், வழியாக கண்ணியமாக சென்றேன்.
மேஜர் கோபமாக காத்திருந்தார். கண்கள் சிவந்திருந்தன.
யாரோ ஒரு பாஸ்டர்ட்.....உள்ளே நுழைஞ்சிருக்கான்....என் பேபி ப்ரெசென்ட் பண்ண பேனாவை திருடி இருக்கான்.
அந்த பேனா என் பனியனுக்குள் ஒளிந்திருப்பது அவர்களுக்கு தெரியாது.
எப்படி?
பின் பக்க கதவு தாழ்ப்பாள் திறந்து இருக்கு....அந்த வழிய நாங்க உபயோகிக்கறது இல்ல....
சென்ட்ரி?
அவன் வெஸ்ட பக்கம் இருக்கிறவன் கிட்ட நெருப்பு வாங்க போயிருக்கான்
அப்பா மேலே போய் விட்டு, ரூமை பார்த்து விட்டு வந்தார்.
சில பேரை நான் சந்தேகிக்கிறேன்......
எனக்கு சிரிப்பு வந்தது.
டிபார்ட்மெண்டில் வேலை செய்பவர்களின் பெயர்களை சொன்னார்.
நீ ஏண்டா சிரிக்கிற? என்றார் செல்லமாக.
இல்ல...யார் எடுத்திருப்பான்னு யோசிக்கிறேன்
நான் அந்த தருணத்திற்க்காக காத்திருந்தேன். ஏதோ ஒரு முனையில், சந்தர்ப்பத்தில் அப்பாவும், மேஜரும் இந்த இடத்தை விட்டு நகர்ந்தால், ஒரே நிமிஷத்தில் மேலே சென்று பேனாவை வைத்து விட்டு வரலாம்.
என் அதிர்ஷ்டம். அப்பா செக்யூரிடியிடம் ஏதோ சொல்வதற்கு சொல்ல, வாசலுக்கு நகர, இந்த நேரத்தில் மேஜர் ஏதோ ஒரு போன் காலிற்காக உள்ளே செல்ல,
நிமிடத்தில் நான் மேலே சென்று பேனாவை அதே இடத்தில் வைத்து விட்டு வந்தேன்.
இப்போது அவர்கள் திரும்பி இருந்தார்கள். மேஜர் அப்போதுதான் என்னை கவனித்தார்.
"வாப்பா....காலேஜ் எல்லாம் எப்படி போகுது?"
"நல்லா போகுது அங்கிள்.....ஏன் அங்கிள் டென்க்ஷனா இருக்கீங்க"
"நேத்து நைட் யாரோ வந்து என் ரூமிற்க்கு வந்து, என் பேனாவை திருடிட்டாங்க...அது என் லக்கி பென்..."
"எங்கே வச்சிருந்தீங்க...நல்லா தேடி பார்த்தீங்களா?"
மேலதான் அலமாரியில்
ஓகே...
சரி...எதுக்கும் ஒரு தடவை பார்த்துட்டு வந்துடறேன்
நான் அந்த க்ளைமாஸ் காட்சிக்காக காத்திருந்தேன். அவர் பேனாவோடு வந்தால், ஞாபகமறதி என்று கூறி, விஷயத்தை ஊத்தி, மூடி விடலாம் என்று நினைத்திருந்தேன்.
அவர் பேனாவோடு வந்தார்.
என்ன ஆச்சரியம்.....இங்கேயேதான் இருக்கு.....சட் ......இத்தனை ஞாபக மறதிக் கூடாது என்றார்.
சாரி நண்பரே......என்றார் என் அப்பாவைப் பார்த்து.
பேனா அங்கேயேதான் இருந்தது....நான்தான் ஒழுங்கா பார்க்கலை....மற்றபடி யாரும் வரல....
நானும் அப்பாவும், சந்தோஷமாக விடை பெற்று வாசல் வரும் பொழுது, மீண்டும் கூப்பிட்டார்.
வெய்ட்...வெய்ட்....
நான் காலையிலே கூட பார்த்தேன்....அங்கே இல்லே....இப்ப இருக்கு....நடுவுல யாரும் வரல...சோ, வேற யாரோ கண்டிப்பா இத பண்ணி இருக்காங்க......இவன்தான் பண்ணி இருக்கணும்....ஐ டவுட் யுவர் சன் என்றார்.......
அப்பாவின் மீசை துடித்ததை முதல் முறையாக பார்த்தேன்.
அங்கிள் நான் ஒண்ணும் பண்ணல......எனக்கு ஒண்ணும் தெரியாது....என்றேன்
பொய் சொல்லாத
இல்ல அங்கிள்.....சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது....
நீதான் எடுத்த......என்னால நிச்சயமா சொல்ல முடியும்....
எதை வச்சு சொல்றீங்க
எல்லா உண்மைகளையும் பூஜாவே  சொல்லிட்டா.....அமித், பூஜா காதலை நான் ஏத்துக்கிட்டேன்...அடுத்த மாசம் கல்யாணம்....
என்னைப் பார்த்து ஜெனரல் கண்ணடித்தார். காதல் ஏதோ கொஞ்சம் புனிதமானதாக தோன்றியது அப்போது.

Tuesday, August 2, 2016

குரு பெயர்ச்சி

வருடா வருடம் நடக்கும் அதே பரபரப்பும், ஆர்வமும் இந்த வருடமும் இருந்தது. அருகிலிருந்த பிள்ளையார் கோவிலில் நோட்டீஸ் விநியோகம் செய்தார்கள். பத்திரிகைகளில், ஒவ்வொரு ராசிக்கும் மார்க் போட்டு இருந்தார்கள். என் ராசிக்கு பார்டர் மார்க்கில் போனால் போகிறது என்று பாஸ் மார்க். டி வியில் பலன்களை விலாவரியாக சொன்னார்கள். ஒரு வழியாக, அடுத்த பெயர்ச்சிக்கு நான் தயாராகி விட்டேன். இதில் நிறைய விஷயங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. ஜோதிட சாஸ்திரப்படி, பெயர்ச்சி அன்றுதான் கோயிலில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று இல்லை. ஒரு வருடத்தில், என்று வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

இருப்பினும், ஏதாவது ஒரு நல்ல மாற்றத்துக்கு நம்மை தயார்படுத்த, மனதை திடப்படுத்த இவையெல்லாம் தேவைதான்.

மாமா உடல் நிலை சரி இல்லாமல் இருந்த  பொழுது, பேர்லேண்ட்ஸ் அருகே, சமயபுரம் மாரியம்மன் அருள் வந்த ஒரு பெண்மணியிடம் என்னை அழைத்து சென்றார்கள். நிறைய கூட்டம். சாயந்திரம் ஆறு மணிக்கு மட்டும் வரும் அருள் வருமாம். நிறைய குங்குமத்தோடு, பயங்கர தோற்றத்தோடு இருந்தார்.
என்ன பிரச்னை என்றார். சொன்னோம். ஒரு எலுமிச்சம் பழத்தை கொடுத்து, மாமா தலைமாட்டில் வையுங்கள். நாளை சரியாகும் என்றார். மூன்றாவது நாளில், மாமா இறந்தார்.

பரிகாரங்கள் இறைவனுக்குத்தானா என்கிற அடிப்படை சந்தேகம் எழுந்தது. பிற்பாடு மஹரிஷியின் பன்ச் வரிகள் என்னைக் கவர்ந்தன.

இறைவனுக்கு வணக்கம் தேவையா? இணக்கம்தான் தேவை.
இறைவனுக்கு உடலும் இல்லை. குடலும் இல்லை.
இறைவன் இல்லை. இறைநிலை உண்டு.

பரிகாரங்கள் என்பவையே நம் மனத்திற்கு ஒரு வலிமையை கொடுக்கும் சாதனம். இந்த பரிகாரம் செய்தால், உங்களுக்கு இந்த பிரச்சனை தீர்வாகும் என்று ஒருவர் சொன்னால், அதன் அடித்தளத்தில், நம் மனத்தில், அந்த பிரச்சனையை ஏதோ ஒரு வழியில் தீர்க்க முடியும் என்கிற பாசிட்டிவ் எண்ணத்தை உண்டு பண்ணுகிறது. மற்றபடி பரிகாரங்கள், இறைவனுக்கு அல்ல. நமக்குத்தான்.

Monday, August 1, 2016

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்த பிளாகிற்கு சராசரியாக ஒரு நாளைக்கு பத்து பேர் வருகிறார்கள் என்று ரிப்போர்ட் சொல்கிறது. எண்ணிக்கை குறைவுதான். எண்ணிக்கையே குறிக்கோளாக வைத்துக் கொண்டு, நிச்சயம் எழுத முடியாது. நல்ல எழுத்துக்கள் பல, சிலராலேயே வாசிக்கப் படுகிறது. அசோகமித்திரன் என்றால், பலருக்கு தெரிந்திருக்காது. நமீதா, என்றால் பலருக்கு தெரிந்திருக்கக் கூடும். இது அவரவர்களின் குற்றம் இல்லை. நாம் விரும்பியதை நாமே தேர்ந்தேடுத்துக் கொள்கிறோம். வரலொட்டி ரங்கசாமி என்கிறவர் நிறைய வருஷம் எழுதி வருகிறார். எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்?

இருப்பினும் பீட்பேக் எல்லா இயலிலும் உண்டு. இந்த பிளாக்கின் யோக்கியாதாசங்களை சுருக்கமாக எழுதி அனுப்பினால், உங்கள் கருத்துக்களை என்னால், புரிந்து கொள்ள முடியும். கீழே என் முகவரி. contactvenkataraman@gmail.com

நிறைய பேசுவோம்.

Sunday, July 31, 2016

பாக்யராஜின் திரைக்கதை அமைப்பு

சில வருடங்கள் கழித்து, பாக்யராஜின் திரைப்படங்களை பார்த்து வருகிறேன். சின்ன வயதில், அந்த திரைக்கதைக்கும், நேட்டிவிட்டிக்கும் உருகியிருக்கிறேன். இப்போது ஒரு திரைப்பட ஆர்வலனாக பார்க்கும்பொழுது, அவரின் படைப்புத்திறன் பிரமிக்க வைக்கிறது.

மொத்தம் இருபத்து நான்கு படங்கள். எழுபதுகளின் மத்தியிலிருந்து, தொன்னூறுகளின் நடுப்பகுதி வரை நம்மை ஆக்கிரமித்த பலதரப்பட்ட ரசனைகளோடு உருவாக்கப்பட்ட திரைப்படங்கள். எல்லா படங்களிலும், பிரதான கதாபாத்திரம் பாக்யராஜ். தன் எல்லைகள் உணர்ந்து, பெரும்பாலும் லோயர் மிடில் க்ளாஸ் இளைஞன். ஆக்ரோஷமான சண்டை இல்லை. அப்பா, அம்மாவை கொலை செய்த வில்லன்களை, இருபது வருடம் கழித்து, பழி வாங்க கண் சிவந்து காத்திருக்கும், கொலைவெறி இல்லை. தங்கை கற்பழிப்பு, குடும்ப பாட்டில் இணைதல் இல்லை. அந்த ஏழு நாட்கள், மணிரத்தனத்தின் பட்டறையில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.

முந்தானை முடிச்சு, கமெர்ஷியலாகவும், நல்ல கருத்தாழம் உள்ளதாகவும் இருக்கிறது. முதல் முறையாய் வெண்திரையில் சித்தி என்பவள் நல்லவள்.

ஒரு தேர்ந்த சிற்பியை போல, ஒவ்வொரு கதையும் நாம் சாலையில் சந்திக்கும் சாதாரண மனிதர்களைப் பற்றி செதுக்கப்பட்டிருக்கிறது. எந்த அலட்டலும் இல்லாத, தொண்ணுறுகளில் நாம் பார்த்த கிராமம் கண் முன் விரிகிறது. ஆங்காங்கே, ஊறுகாய் மாதிரி முருங்கைக்காய் சமாச்சாரங்கள்.

பாக்யராஜின் ஆச்சர்யமான நோக்கு. எல்லா படங்களிலும் பெண்களின் கதாபாத்திரத்துக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம். மற்ற படங்கள் போல, ஹீரோயின் மரத்தை சுற்றி காதல் புரியாமல், கதையின் ஆதார நாடியை தீர்மானிக்கும் பாத்திரமாக பெண்கள் போற்றப்படுவது.

ஹீரோ என்பவன், யதார்த்தத்தை மீறாமல், அந்த பெண்ணுடன் வாழ இருப்பவன். அவர்களுக்குள் எழும் முரண்பாடுகள் கதையின் போக்கை தீர்மானிக்கின்றன.

எத்தனை ஹீரோவிற்கு கைக்குழந்தையோடு, பஸ்ஸிலிருந்து இறங்கி, குழந்தையின் மலத்தை கழுவத் தெரியும். முந்தானை முடிச்சின் அறிமுக காட்சியே நம்மை திகைக்க வைக்கிறது.

தொண்ணுறுகளுக்கு பிறகு கிராமங்கள் வழக்கொழிந்து விட்டன. வாழ்க்கை மிக வேகமாய் நகருகிறது. பணமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக திகழுகிறது. பாக்யராஜ் அவர்களின் படங்கள், இழந்து போன, பலவற்றை நினைவுப் படுத்திக் கொண்டிருக்கிறது. பாக்யராஜ் அவர்களும், ஹீரோவின் அப்பா பாத்திரங்களுக்கு வர ஆரம்பித்து விட்டார். இப்போது அவர் அப்பாவாக நடிப்பதில், எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனாலும், அவரின் முப்பது வயதுகளில் குழந்தைக்கு தந்தையாக நடித்த துணிச்சலை பாராட்டியே  ஆக வேண்டும்.

நல்ல படங்களை பார்த்து ரசிக்க, அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நஷ்டம் பாக்யராஜ் போன்றவர்களுக்கு இல்லை.


Thursday, July 28, 2016

சேலத்து கதைகள் - வாடகை சைக்கிள்

முதன் முதல் சைக்கிள் ஒட்டிய நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. சின்னக் கடைவீதியின் பாதாள மேடு, பள்ளங்களை கடந்து, கறிக்கடை பாய் சந்தில் நுழையாமல், மூணு பிள்ளையாரை சுற்றி, மீண்டும் வந்த பொழுது, அடுத்த ரவுண்டிற்கு தம்பி காத்திருந்தான்.
அடுத்த இருபது நிமிடங்களுக்குள் அவன் கற்றுக்கொள்ள வேண்டும், என்கிற தவிப்பும், ஆர்வமும் தெரிந்தது.
சீக்கிரம் உடுடா
கிட்டத்தட்ட, என்னிடம் இருந்து, சைக்கிளை பிடுங்கி கொண்டு, அவன் ரெண்டே மிதியில் ராஜாஜி பவனைத் தாண்டியிருந்தான்.
நான் சைக்கிளை மீண்டும் கார்த்திக் கடையில் விட தீர்மானித்து காத்திருந்த பொழுது எதிர்பாராத சம்பவம் நடந்தது.
கிட்டத்தட்ட அந்த ரவுண்ட் முடிந்து, தம்பி தூர வருவது தெரிந்தது. கற்றுக் கொள்ளும் ஆர்வத்தினாலோ, உற்சாகத்தினாலோ, அவன் திடீரென்று இரண்டு கைகளையும் ஹேண்டில் பாரில் இருந்து எடுத்து விட்டு, சுதந்திர உணர்வில், என்னை நோக்கி வரும் பொழுது, திடீரென்று நடுவில்.......அந்த குடிகாரனை எதிர்பார்க்காமல்....
குடிகாரனின் முட்டி பெயர்ந்து விட்டது.
"ழேய்...."
தமிழின் பிரத்யேக பாஷைகளை உபயோகிக்க தொடங்கினான். 
வாடகை சைக்கிள் பொலிவிழந்து, அருகில் இருந்த முனிசிபல்  ஸ்கூலின் சுவரின் காரையை பெயர்த்திருந்தது.
ஆங்காங்கே, சேதாரமான சைக்கிளை ஒன்று திரட்டி, பிடித்து வைத்து கொண்டான்.
"போடா...கேனப்....மேல வந்து விடறயா?... மேல வந்து இடிச்ச இல்ல....நூறு ரூபாய் எடுத்து வை...."
நான்  தம்பியையும், சைக்கிளையும் காப்பாற்ற உள்ளே நுழைந்தேன். காய்கறி வந்தவர்கள் பார்த்துக் கொண்டே கடந்தார்கள்.
"அண்ணா...அண்ணா....தெரியாம இடிச்சுட்டான்...மன்னிச்சுடுங்க..."
"நீ யாரூரா?"
"அவன் அண்ணன்..."
"நீ பாப்பார பையன்தாண்டா? நட உங்க வூட்டுல நியாயம் கேட்கலாம்"
எனக்கு மாமாவின் பெல்ட் ஒரு முறை ஞாபகத்திற்கு வந்தது.
"அண்ணா...சாரிண்ணா ...தெரியாம நடந்துடிச்சி....வீட்டில தெரிஞ்சா கொன்னுடுவாங்க..."
"இப்படி மேல வந்து இடிக்கறியே, யாரு வந்து பார்ப்பா? இதெல்லாம் வேலைக்கு ஆகாது...நட"
தம்பி தனக்கு சம்பந்தம் இல்லாதது போல, வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.
"நூறு ரூபா எடுத்து வை ..இல்லேன்னா, சைக்கிள் கிடைக்காது"
நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். தம்பியிடம், நீ கொஞ்ச நேரம் இங்கேயே இரு....நான் போய் கார்த்திக் சைக்கிள் மார்ட் ஒனர கூட்டிட்டு வந்திடுறேன்...
"தம்பி நீ எங்கே போற? "
"இல்லன்னா...இப்ப வந்திடுறேன்...."
"சும்மா வராத...நூறு ரூபாயோடு வா....நிறைய வேலை இருக்கு "
கீழே குனிந்து, எவ்வளவு ரத்தம்.....ம்....
சைக்கிளின் பின் பக்கத்தில் இருந்த, எம்பலத்தை பார்த்து விட்டு, கார்த்திக் சைக்கிள் மார்ட்.....தக்காளி சைக்கிளா விடுறீங்க...என்றான்...
நான் பயந்து கொண்டே, சைக்கிள் கடையை அடைந்தேன்.
வாடா...மாமா...
எனக்கு ஏனோ ஸ்கூலில் அந்த பெயர்..
சைக்கிள் எங்கே?
ஒரு நிமிடம் செலவழித்து விட்டு, எல்லா விவரங்களையும் சொன்னேன்.
"அந்த குடிகாரன் சைக்கிளை விட மாட்டேங்கிறான்...என் தம்பி மேல எந்த தப்பும் இல்ல."
கார்த்திக் அண்ணனுடன் திரும்பி வரும் பொழுது, தம்பியும், சைக்கிளும் மட்டும் இருந்தார்கள்.
"அந்த ஆளு எங்கேடா?"
"வேற இன்னொரு ஆளு வந்த உடனே போயிட்டாரு...."
"சரி, வண்டியை எடு...."
சரிந்திருந்த ஹாண்டில் பாரை அங்கேயே சரி பண்ண முடிந்தது.
"இது என்ன?"
சைக்கிளில் அந்த குடிகாரனின் சட்டை கிழிசல்.
"அந்த ஆளுக்கு ஏதாவது பணம் கொடுத்தீங்களா?"
"இல்ல "
"இனிமேயும் கொடுக்காதீங்க "
 "நல்ல பசங்கடா.....மெயின் பஜார்ல ஓட்டாதீங்க...வேகமா போகாதீங்க...."
வரும் வழியில் நிறைய அறிவுரைகள் கிடைத்தது.
அடுத்த சில நாட்களுக்கு அடக்கி வாசித்தோம். சந்துகளில் ஒட்டினோம். வயசானவர்கள் வந்தால், பிரேக் அடித்து சென்றோம்.
கிட்டத்தட்ட, அந்த முதல் நாள் சைக்கிள் அனுபவம்  எங்கள் நினைவில் அழியத்தொடங்கியது.
அன்று ஸ்கூல் முடிந்து, வீட்டிற்கு திரும்பும் வழியில் ஏதோ ஒரு சவ ஊர்வலம் கடந்து சென்றது. ஜாக்கிரதையாக சாலையில் கிடந்த எந்த பூவையும் மிதிக்காமல், ஒதுங்கி நின்ற பொழுது, கார்த்திக் அண்ணன், வெற்றுடம்போடு பானையில் நெருப்போடு எல்லாருக்கும் முன்னால் நடந்து செல்வது தெரிந்தது.
நான் உடனே, ஒரு ஆர்வத்தில், சவத்தை பார்த்தேன்.
அதே குடிகாரன்....