Sunday, July 31, 2016

பாக்யராஜின் திரைக்கதை அமைப்பு

சில வருடங்கள் கழித்து, பாக்யராஜின் திரைப்படங்களை பார்த்து வருகிறேன். சின்ன வயதில், அந்த திரைக்கதைக்கும், நேட்டிவிட்டிக்கும் உருகியிருக்கிறேன். இப்போது ஒரு திரைப்பட ஆர்வலனாக பார்க்கும்பொழுது, அவரின் படைப்புத்திறன் பிரமிக்க வைக்கிறது.

மொத்தம் இருபத்து நான்கு படங்கள். எழுபதுகளின் மத்தியிலிருந்து, தொன்னூறுகளின் நடுப்பகுதி வரை நம்மை ஆக்கிரமித்த பலதரப்பட்ட ரசனைகளோடு உருவாக்கப்பட்ட திரைப்படங்கள். எல்லா படங்களிலும், பிரதான கதாபாத்திரம் பாக்யராஜ். தன் எல்லைகள் உணர்ந்து, பெரும்பாலும் லோயர் மிடில் க்ளாஸ் இளைஞன். ஆக்ரோஷமான சண்டை இல்லை. அப்பா, அம்மாவை கொலை செய்த வில்லன்களை, இருபது வருடம் கழித்து, பழி வாங்க கண் சிவந்து காத்திருக்கும், கொலைவெறி இல்லை. தங்கை கற்பழிப்பு, குடும்ப பாட்டில் இணைதல் இல்லை. அந்த ஏழு நாட்கள், மணிரத்தனத்தின் பட்டறையில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.

முந்தானை முடிச்சு, கமெர்ஷியலாகவும், நல்ல கருத்தாழம் உள்ளதாகவும் இருக்கிறது. முதல் முறையாய் வெண்திரையில் சித்தி என்பவள் நல்லவள்.

ஒரு தேர்ந்த சிற்பியை போல, ஒவ்வொரு கதையும் நாம் சாலையில் சந்திக்கும் சாதாரண மனிதர்களைப் பற்றி செதுக்கப்பட்டிருக்கிறது. எந்த அலட்டலும் இல்லாத, தொண்ணுறுகளில் நாம் பார்த்த கிராமம் கண் முன் விரிகிறது. ஆங்காங்கே, ஊறுகாய் மாதிரி முருங்கைக்காய் சமாச்சாரங்கள்.

பாக்யராஜின் ஆச்சர்யமான நோக்கு. எல்லா படங்களிலும் பெண்களின் கதாபாத்திரத்துக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம். மற்ற படங்கள் போல, ஹீரோயின் மரத்தை சுற்றி காதல் புரியாமல், கதையின் ஆதார நாடியை தீர்மானிக்கும் பாத்திரமாக பெண்கள் போற்றப்படுவது.

ஹீரோ என்பவன், யதார்த்தத்தை மீறாமல், அந்த பெண்ணுடன் வாழ இருப்பவன். அவர்களுக்குள் எழும் முரண்பாடுகள் கதையின் போக்கை தீர்மானிக்கின்றன.

எத்தனை ஹீரோவிற்கு கைக்குழந்தையோடு, பஸ்ஸிலிருந்து இறங்கி, குழந்தையின் மலத்தை கழுவத் தெரியும். முந்தானை முடிச்சின் அறிமுக காட்சியே நம்மை திகைக்க வைக்கிறது.

தொண்ணுறுகளுக்கு பிறகு கிராமங்கள் வழக்கொழிந்து விட்டன. வாழ்க்கை மிக வேகமாய் நகருகிறது. பணமே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக திகழுகிறது. பாக்யராஜ் அவர்களின் படங்கள், இழந்து போன, பலவற்றை நினைவுப் படுத்திக் கொண்டிருக்கிறது. பாக்யராஜ் அவர்களும், ஹீரோவின் அப்பா பாத்திரங்களுக்கு வர ஆரம்பித்து விட்டார். இப்போது அவர் அப்பாவாக நடிப்பதில், எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனாலும், அவரின் முப்பது வயதுகளில் குழந்தைக்கு தந்தையாக நடித்த துணிச்சலை பாராட்டியே  ஆக வேண்டும்.

நல்ல படங்களை பார்த்து ரசிக்க, அடுத்த தலைமுறைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். நஷ்டம் பாக்யராஜ் போன்றவர்களுக்கு இல்லை.


No comments:

Post a Comment