Monday, July 11, 2016

என் கால் பதித்த தடங்கள் - 4

டெல்லியில் கொஞ்ச நாள் இருந்து விட்டு திரும்பிய பொழுது, சேலம் நிறைய மாறி இருந்தது. எல்லா இடங்களிலும், கடைகளிலும், கம்ப்யூட்டர் தெரிந்தது. நான் கல்லூரியில் படித்த நாட்களில், இத்தனை பரவலாக கம்ப்யூட்டர்கள் இருந்ததில்லை. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் லேபின் ஏசி அறைக்குள் ஷூ, சாக்ஸ் எல்லாம் கழட்டி விட்டு, பயபக்தியோடு உள்ளே நுழைந்து பழக்கப்பட்டிருந்த எனக்கு, முற்றிலும் புதிய அனுபவம்.


கொஞ்ச நாள், வேலைக்கு எதற்கும் செல்லாமல், ஜாலியாக ஊரை சுற்றிக் கொண்டிருந்த நாட்களில், அத்வைத ஆசிரமம் ரோடு வழியாக பேர்லன்ட்ஸை அணுகும் பொழுது, புதியதாக போர்டு ஒன்று பார்த்தேன். "அகஸ்தியர் நாடி ஜோதிடம்". உறங்கிக்  கொண்டிருந்த என் நியூரான்கள், விழித்துக் கொண்டன. கை ரேகை கொடுத்தால், போன ஜென்மம் கூட சொல்வார்கள் என்று சொன்னார்கள். மயிர்க்கால் சிலிர்த்துக் கொண்டது. அந்த அற்புத அனுபவத்திற்க்காக, நண்பனுடன் உள்ளே நுழைந்தேன்.


கிட்டத்தட்ட முனிவரின் அசிஸ்டன்ட் மாதிரி இருந்த மரவுரி தரித்தவர், எதுவும் பேசாமல், வலது கை கட்டை விரலின் அச்சை, பேப்பரில் பிரதி எடுத்து, "கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க...சுவடி
 தேடணும்" என்றார். நான் அருகில் இருந்த, தினத்தந்தியில் ஆழ்ந்தேன்.


அரை மணி நேர மயான அமைதிக்கு பிறகு, மரவுரி திரும்பி வந்தார்.
உள்ளே வாங்க...
செருப்பையெல்லாம் கழட்டி விட்டு, ஹால் மாதிரி இருந்த அறைக்குள், நுழைந்தேன். ஊதுபத்தி, சாம்பிராணி வாசனை. பீடத்தில் அகஸ்தியரின் ரெண்டு அடி சிலை. நிறைய பூக்கள்.
அப்போதுதான் அவரை கவனித்தேன். மரவுரியின் பாஸ். தாடி, மீசை எல்லாம் வைத்துக் கொண்டு, சிகப்பு நிற வேஷ்டி. வெள்ளை சட்டை.

உட்காருங்க....

குரலில் கூட ஒரு அதிர்வு.

அவர் கையில், இப்போது ஓலைச்சுவடி மாதிரி ஏதோ தெரிந்தது.

தம்பி, இப்போ உங்க கிட்ட சில கேள்விகள் எல்லாம் கேப்பேன்.  நீங்க ஆமா, இல்லை மட்டும் சொன்னா போதும்....உங்க ஜாதகத்தை நீங்க காண்பிக்க வேண்டாம்...சரியான நாடி வந்ததும், நான் உங்க ஜாதகத்தை போட்டு காண்பிக்கறேன்....

நான் மஞ்சப்பையில் இருந்த என் ஜாதகத்தை இறுக மூடிக் கொண்டேன்.


செய்யுள் மாதிரி ஏதோ படிக்க ஆரம்பித்து, இடையே கேள்விகள் கேட்டார்.

உங்க அப்பா இப்ப உயிரோடு இருக்காரா?
இல்லை

அடுத்த சுவடியில் கொஞ்சம் படித்து விட்டு,
நீங்க உங்க அப்பாவிற்கு முதல் குழந்தையா?
ஆமாம்

மீண்டும் செய்யுள்....

உங்க கூட பொறந்தவங்க ஒரே ஒரு தம்பிதானே?
ஆமாம்

மீண்டும் செய்யுள்....

மொத்தம் பத்து, பதினைந்து கேள்விகள் கேட்டு விட்டு, கடைசியில் முடிவிற்கு வந்தவராக, அந்த ஒரே ஒரு லீபை மட்டும் விளக்கொளியில் வாசித்தார்.
வெளியே கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க....

திரும்பி வந்த பொழுது, அவர் வைத்திருந்த பேப்பரில் என் ஜாதகம் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

தம்பி, அடுத்த வாரம் நீங்க இந்த ஊர்ல இருக்க மாட்டீங்க...வெளியூர்ல வேலை கிடைச்சு போயிடுவீங்க...


அடுத்த வாரம் சென்னையில்இருந்த ஒரு கம்பெனியில் இருந்து, வேலைக்கான உத்தரவு வந்து, சென்னைக்கு
 பஸ் ஏறும்பொழுது ஆச்சரியமாகத்தான் இருந்தது.







No comments:

Post a Comment