Thursday, July 14, 2016

ஸ்மார்ட் போன் - சிறுகதை

சென்னையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தின் பார்சன் காம்ப்ளெக்சில் முதல் மாடி பதினேழு ஏ வில் சமைத்துக் கொண்டிருக்கும் என் மனைவியைப் பற்றி, ஒரு வ்யாஸமே எழுதலாம்.
பெல் சத்தம் கேட்டு, கதவை திறங்களேன்.....என்று என்னை திட்டி விட்டு, கதவைத் திறந்தால், சலவைத் துணிகள்.
மொத்தம் பதினைந்து உருப்படி...போன தடவை தர வேண்டிய பாக்கி, ஐம்பத்தி ஐந்து ...இந்த தடவை
மிக சரியாக சில்லறை கொடுத்து விட்டு, உங்களுக்கு இந்த வாட்ஸ் , பேஸ் புக் தாண்டி, வேற ஏதாவது தெரியுமா?என்கிறவளை திருத்தமாக பார்த்தேன்.
இந்த வயதிலும் நீ சும்மா கும்முன்னு இருக்கே
நான் என்ன கேட்கறேன்? நீங்க என்ன சொல்றீங்க?
அருகில் நெருங்கி, அணைக்க முற்படும் பொழுது,
"வேண்டாம்...எல்லாம் நடிப்பு....அந்த பேஸ்புக்கையே கட்டிண்டு அழ வேண்டியதுதானே?" என்றாள்.
அவள் சொல்வதில் கொஞ்சம் நியாயம் இருப்பதாகத்தான் பட்டது. காலையில் எழுந்ததும், பல் தேய்க்கும் முன் விசுவிடமிருந்து, குட் மார்னிங் மெசேஜ் வந்து விடும். அதற்கப்புறம் சிற்சில குரூப்களின் மெசேஜ் வந்து விடும்.
எல்லாவற்றுக்கும் பதில் அனுப்பும் பொழுதே, காபி தயாராகி விடும்.
என்னங்க, நம்ம பழைய வீட்டில, பக்கத்தில இருந்தாங்களே ராஜீ
ம்
கைகள் ஸ்மார்ட் போனில் விளையாடிக் கொண்டிருக்கும்.
அவங்க பையன் கீழே விழுந்துட்டானாம்
ம்
இங்க கேட்கறீங்களா இல்லையா?
ம்
ஒரு வழியாய், பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணி விட்டு,
"இப்ப சொல்லு....யாருக்கு என்ன "
"சரியா போச்சு......நான் சொன்ன எதுவுமே காதுல விழுகலையா?"
"இல்ல கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்"
"பொய் "
"நிஜமா"
"வர வர உங்களுக்கு என்ன விட, இந்த பேஸ்புக், வாட்ஸ் தான் முக்கியமா போச்சு இல்ல"
"அது வாட்ஸ் இல்லமா....வாட்ஸ் அப்" என்கிற மகளை முறைத்தாள்.
" நீங்க எல்லாம், மெத்த படிச்சவங்க....நான் படிக்காதவ போதுமா?" என்றாள்.
"சரி...மொதல்ல, இந்த சொசைட்டியோட நீ சேரணும்....கிணத்து தவளையா இருக்க கூடாது. இன்னிக்கே சாயந்திரம் உனக்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கித் தரேன்...." என்றேன்.
"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்"  என்றாள்
சாயந்திரம் ஆபிசிலிருந்து சீக்கிரம் வந்ததும், பூ வாங்கி வந்ததும், சந்தோஷப் படுத்தி இருக்க  வேண்டும்.
"இது இப்ப தேவையா? இருக்கற போனே போதும்" என்றாள்
"நீ வச்சிருக்கிறதுக்கு பேரு போனா, செங்கல்...பேட்டரியே மூணு கிலோ" என்றாள் ஆர்த்தி, மகள்.
"வாங்கி நாலு வருஷமாறது, இது வரைக்கும் ஒரு ரிப்பேர் வந்தது இல்லை..இப்ப எதற்கு மாற்றணும்? நான் பேசறது அப்பா கிட்ட, அண்ணா கிட்ட, இதுக்கு எதுக்கு ஸ்மார்ட் போன்" என்றாள்.
"உலகோடு ஒத்து வாழ்...இது பழமொழி......இன்றைய தேதிக்கு, ஸ்மார்ட் போன் வரப்பிரசாதம்....உலகத்துல இருக்கிற யார் கூட வேணாம், சாட் பண்ணலாம், டிக்கெட் புக் பண்ணலாம்,
பேஸ்புக், வாட்ஸ் அப்.....அது ஒரு டிஜிட்டல் உலகம்..."
 காரில் செல்லும் பொழுது, உற்சாகமாக இருந்தது. ஸ்டெரியோவில் இளையராஜா குழலூதும் கண்ணனுக்கு என்று வழிந்தது.
அடையாறில் இருந்த சாம்சங்கின் ஷோ ரூமில், நிறைய மாடல்கள் இருந்தது. 
"எதுக்கு? எனக்கு வேணாம்...இதெல்லாம் எப்படி யூஸ் பண்றதுன்னு கூட தெரியாது "
"அம்மா, அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா....ஈஸி.....சப்பை மேட்டர்மா "என்றாள் ஆர்த்தி.
ஒரு வழியாக பதினைந்தாயிரத்திற்கு ஒரு நல்ல மாடலை தேர்வு செய்தோம்.
"இதற்கு பேசாம, ஆர்த்திக்கு தோடு எடுத்திருக்கலாம்" என்றாள் .
அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் மனைவி ஏதோ நோண்டிக் கொண்டிருந்தாள்.
"ஏங்க, போட்டோவை எப்படி அனுப்பறது "
"தமிழ்ல எப்படி டைப் பண்றது "
வெள்ளிக் கிழமை சாயந்திரம் ஆபிஸ் மீட்டிங் முடிய நேரம் ஆகும் போல் இருந்தது. வாட்ஸ் அப்பில், மனைவி எண்ணை தேர்வு செய்து, வில் கம் லேட் ...மீட்டிங் என்று டைப்பினேன்.
சரிங்க...டிபன் என்ன பண்ணனும் என்று பதில் வந்தது.
கொஞ்சம் யோசித்து, அடை என்று டைப் பண்ணினேன்.
கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. காலம் மாற, மாற கலாச்சாரங்களும் மாறுவதை தவிர்க்கமுடிவதில்லை.
சிறு வயதில் தீபாவளிக்கு, ஊரில் சொந்தக் காரர்களின் வீட்டிற்கு தூக்கில் பலகாரங்களோடு செல்வோம். இன்று? காலையில் ஐந்து மணிக்கு வாட்ஸ் அப்பில், "கங்கா ஸ்நானம் ஆச்சா?"வோடு முடிந்து விடுகிறது.
வீட்டிற்கு திரும்பும் பொழுது, வாசல் விளக்கு எரியவில்லை. விளக்கு ப்யூஸ் ஆகி விட்டதா? காரை நிறுத்தி விட்டு,  உள்ளே சென்றேன்.
டி வி ஒரு பக்கம் அலறிக்கொண்டிருந்தது. ஹால் நிறைய குப்பைகள். ஏதேதோ பேப்பர்கள். ஏன் சாயந்திரம் பெருக்க வில்லையா?
மகள் ரூமில் மொபைலில் இயர் போனில் பாட்டுக் கொண்டிருந்தாள்.
அம்மா எங்கே என்று கத்த வேண்டி இருந்தது.
உள்ளே சமையல் ரூமில் நுழைந்தேன்.
அலமாரிகள் திறந்து இருந்தன. நறுக்குவதற்க்காக காய்கள் தயார் நிலையில் இருந்தன.
மனைவி மொபைலில் யாரிடமோ வாட்ஸ் அப்பில்  சாட் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
வாங்க....
என்று ஏதோ டைப் செய்தாள்.
இன்னும் அடைக்கு ஊற வைக்கல
மீண்டும் டைப் செய்தாள்.
ரொம்ப பசிச்சா, ஹோட்டல்ல டிபன் வாங்கி வந்துடுங்க ...எனக்கு உடம்பு முடியல என்றாள்.
இப்போது யாருக்கோ  ஸ்மைலி அனுப்பிக் கொண்டிருந்தாள்.
நான் கேரேஜை திறந்து, டூ வீலரை எடுத்துக் கொண்டு, அடுத்த தெருவில் இருந்த முருகன் இட்லி கடையை நோக்கி விரைந்தேன்.
டிபன் வாங்கி கொண்டு, திரும்பும் பொழுது, பக்கத்தில் செல் போன் கடை தெரிந்தது.
வீட்டிற்கு திரும்பபொழுது டிபனுடன் பேசிக் போன் ஒன்றும் மனைவிக்கு வாங்கி கொண்டேன்.

No comments:

Post a Comment