Tuesday, July 19, 2016

தமிழன் என்றோர் இனமுண்டு - சிறுகதை



கோலாலம்பூர் எனக்கு புதிய நகரம். அதுவும் முதல் நாள் இரவில்தான் இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்திருந்தேன். டாக்ஸி ட்ரைவர் கிளம்பும் பொழுது, ப்ரிக் பீல்ட்ஸ் பின் பக்கம் போயிடாதீங்க....அங்கே அந்த தொழில்தான் நடக்குது. பணத்தை உருவிடுவாங்க...என்று எச்சரித்திருந்தான்.
இரவில் பயங்கரமாய் தெரிந்த கட்டிடங்கள், பகலில் சாதுவாகத்தான் தெரிந்தன. யாரோ ஒரு சீமாட்டி துணி உணர்த்திக் கொண்டிருந்தாள். அநேகமாக, இந்தோனேசியாகாரியாக இருக்க வேண்டும். என்னைப் பார்த்து, மோகனமாய் சிரித்தாள். எனக்கு டிரைவரின் எச்சரிக்கை ஞாபகத்திற்கு வந்தது. முகத்தை முடிந்த வரை, விறைப்பாய் வைத்து கொண்டு, ஹோட்டலை தேடிக் கொண்டிருந்தேன்.
மதிய வேளையில் நல்ல பசி. ஒரு வழியாய்,ஒரு நல்ல ஹோட்டலை தேடிக் கண்டுபிடித்து, உள்ளே நுழைந்தேன். பழக்கப்பட்ட சீன முகங்கள். 
அப்போதுதான் பிரசாந்தை முதல் தடவையாய் சந்தித்தேன்.
ப்ரசாந்த்திற்கு இருபது வயது இருக்கலாம். லட்சணமான முகம். உண்மை பேசும் கண்கள். சிவந்த உதடுகள். மெலிதான மீசை. ஆரம்ப கால, சிவகுமாரின் ஜாடை.
"அண்ணே....என்ன சாப்பிடுகிறீர்கள்"
அண்ணே..என்கிற தொனி மிகப் புதிதாய் இருந்தது. அத்தனை அழுத்தமான தமிழ்.
"மீல்ஸ்"
"அந்த விசையை கொஞ்சம் அழுத்துங்களேன்..."
ஸ்விட்சைதான் அப்படி சொல்கிறான்.
நான் அவனிடம் பேச ஆசைப்பட்டேன்.
"தம்பிக்கு எந்த ஊரு?"
"மட்டக்களப்பு"
நான் பத்திரிகைகளிலும், ரேடியோவில் (சாரி வானொலியிலும்) கேட்ட பெயர்.
"நீங்க ஸ்ரீலங்காவா?"
"ஓம்"
"நீங்க எப்படி இங்கே ?"
"அது ஒரு பெற்றிய கதை...பின்னாடி கதைக்கிறன்"
எனக்கு தெனாலி படம் ஞாபகத்திற்கு வந்தது.
இன்னும் கொஞ்சம் பேச வேண்டும், அல்லது கதைக்க வேண்டும் என்பதை தடுப்பது போல், நிறைய கஸ்டமர்கள் வந்து விட்டார்கள்.
நான் ப்ரசாந்த்திற்கு நன்றி சொல்லி விட்டு, இருபத்தி ஏழாவது மாடியில் இருந்த கெஸ்ட் ஹவுசில் நுழைந்தேன். தூங்கும் பொழுது, அந்த அண்ணே என்னை உருக்கியது.
என் தினப்படி வேலையில் மாற்றமே இல்லை. தினமும் கே எல் சென்ட்ரல் வரை சென்று, பிளாஸ்டிக் கார்டில் திறக்கும் ஆட்டோமேட்டிக் கதவுகளை திறந்து, கீழே பாதாள பிளாட்பாரமில் காத்துக் கொண்டிருக்கும் மெகா சைஸ் ரெயில்களில் பயணித்து, புத்ரா ஜெயாவில் இறங்கி, வெளியே க்யூவில் காத்திருந்து, அங்கொன்றும், இங்கொன்றுமாய் முளைத்து கொண்டிருக்கும் டி கம்பெனிகளின் வாசலில் இறங்கி....வேண்டாம் உங்களுக்கு போர் அடிக்கும்.
மீண்டும் அந்த மாலையில் ப்ரசாந்த்திற்காக ஹோட்டலுக்கு முன்பே சென்றேன். காரணம் அந்த தமிழாய் இருக்கக் கூடும்.
"வாங்க அண்ணே...நீங்க இந்தியாதானே?" என்றான். கை குலுக்கினான். அத்தனை மென்மை.
இத்தனை பணிவா?
"எந்த ஊர் நீங்கள்? எனக்கு இந்தியா என்றால் மெத்தப் பிடிக்கும்"
"சேலம்"
"அங்கேயிருந்து, திருச்சி பக்கம் தானே?"
“பக்கம்தான்.ஏன்?”
“திருச்சி எங்களண்டை பூர்விகம்
“ஓ...அப்படியா?”
“இந்தியா வரவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை”
“வாங்க....வர வேண்டியதுதானே?”
“முதலில் நான் எண்ட நாட்டுக்கு போக வேணும். பிறகு இந்தியா வருவன்”
"நீங்க உங்க நாட்டுலேர்ந்துதானே வந்தீங்க? அப்புறம் ஏன் அங்கேயே போகணும்னு சொல்றீங்க"
"இல்ல...நான் வரவில்லை...ஓடி வந்தனன்..."
"புரியல"
"நான் எண்ட நாட்டுல சண்டைகள் தொடங்கும் பொழுது, பயந்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இங்கே வந்தனன்"
"ஓ"
"போன மாதம் நான் கொழும்பு சென்று எண்ட அம்மாவை பார்த்து விட்டு வந்தனன்"
“அப்ப, அவங்க மட்டக்களப்புல இல்லையா?”
“இல்ல...அவங்க அங்கதான் இருக்காங்க....ஆனால், என்னை பார்க்க இங்கே வந்தாங்க...”
"ஏன் நீங்க மட்டக்களப்புக்கு  போகல?"
"நான் அங்கே சென்றிருந்தால், என்னையும் பிடித்து கொண்டிருப்பர்"
"யாரு?"
"அவங்கதான்.."
"ஏன்?"
"போருக்கு ஆள் வேண்டும் என்று சொல்லி"
"நீங்க வர மாட்டேன்னு சொன்னா?"
"அப்படி அல்ல...போய்த்தான் ஆக வேணும்..."
“நான் தப்பித்தது பெரிரிய கதை தெரியுமா?”
"அன்று பாருங்கோ, நான் டி வி யில் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தனன்....எனக்கு மேட்ச் என்றால் மெத்த பிடிக்கும்....திட்டீரென்று, அம்மா வந்து, என்னை ஓட சொன்னனள்...நான் எங்கே போக முடியும்? வாசலிலே யாரோ கதவை பலமாக இடித்துக் கொண்டிருந்தார்கள்...என் அம்மா என்னிடம், நீ ஒருவன்தான் ஆண் வாரிசு...எண்ட மூணு மாமாக்களும், சண்டையில் செத்து போய்விட்டனர்...எனவே, எப்படியாவது ஓடி பிழைத்துக் கொள் என்று சொல்லி, கையை பிடித்து கெஞ்சினாள்...நான் எங்கே போவது தெரியாமல், வீட்டின் பின் பக்கம் வந்தனன்..அங்கேயும் யாரோ கதவை இடிக்க, நான் பயந்து போய், சமையல் அறையில் புகை போக்கி இருக்கும் பாருங்கோ, அங்கே பதுங்கினன்"
நான் ஒரு த்ரில்லர் கதையை கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆங்காங்கே, நிறுத்தி அழுகும் பொழுது, கொஞ்சம் ஆசுவாசப்படுத்தினேன்.
"அவர்கள் வந்து, எண்ட அம்மாவிடம் என்னை பற்றி கேட்டார்கள்...ஆனாலும், அம்மா நான் கொழும்பு போய் விட்டதாக கதைச் சார்கள்....அவர்கள் அதை நம்ப வில்லை "
"சொன்னால் நீங்கள் கூட நம்ப மாட்டீர்கள்......மூணு நாள், நான் அங்கேயே இருந்தேன்"
"புகை போக்கிலயா?"
"ஓம்"

"எப்படி?"
"உயிர் பயம்"


"அப்புறம் எப்படி இங்க வந்தீங்க?"
"எப்படியோ யாருக்கும் தெரியாம தப்பிச்சு, கொழும்பு வந்து, பின்னாடி இங்க வந்தனன்....ஊரில நான் கோடீஸ்வரன்......சண்டையில எல்லாம் போயிட்டது....."
எச்சில்  இலையை எடுத்து குப்பையில் போட்டுக் கொண்டிருந்தான்.

"கவலைய விடுங்க....என்னிக்காவது ஒரு நாள் நல்லதே நடக்கும்" என்றேன்.

"சரிங்கண்ணே...இந்தியா வந்தா உங்களை கட்டாயமாய் சந்திக்கிறேன்...."என்று, கை குலுக்கினான்.
 
அபத்த அரசியல் விளையாட்டுக்களைக் கடந்து, மனித நேயமே அந்த மென்மையில் தெரிந்தது.
 




No comments:

Post a Comment