Monday, July 11, 2016

சேலத்து கதைகள் - மயானக் கொள்ளை

எங்கள் பள்ளியின் வலது புற காம்பவுண்டின் வெளிப்புறம் காக்கையன் சுடுகாடு இருந்தது. எதற்க்காக அந்த மாதிரி பெயர் வந்தது என்று இன்று வரை காரணம் தெரியாது.

சுடுகாட்டைப் பற்றிய பயங்கர கதைகளே, அந்த இடத்திற்கு சுவாரசியம் கொடுத்தது.

பாட்டி பயந்து கொண்டு,  சாயந்திரம் ஆறு மணிக்கு மேலே வராதே, பேய் அடிச்சுடும் என்பாள்.

இருந்தாலும்  சில தவிர்க்க முடியாத காரணங்களினால், அவ்வப்போது எட்டி பார்த்திருக்கிறோம்.

யாராவது கிரிக்கெட் பந்தை அடித்தால், அது அங்கேதான் போய் விழும். தூரத்தில் ஏதோ பிணம் எரிந்து கொண்டிருக்கும். காற்றில் நீச்ச நாத்தம். சமாதிக்குள் கை விட்டு, பந்தை எடுத்து போடும் வரை, மற்றவர்கள் காம்பவுண்ட் சுவரில் ஏதாவது பேய்க்காக காத்திருப்பார்கள்.

இந்த நிலையில்தான், மயானக் கொள்ளை நடந்தது.


எங்கள் பள்ளியில் முதல் நாளே, ஹெட் மாஸ்டர் மைக்கில் நாளைக்கு பள்ளிக்கு விடுமுறை என்று அறிக்கை கொடுத்ததும், மைதானத்தில் எல்லாரும் ஆடுவார்கள்.

இந்த மாதிரியான கோலாகல சூழ்நிலையில் ராஜுவிற்கு விபரீத சந்தேகம் ஏற்பட்டது.

சுடுகாட்டுல மாசானக் கொள்ளை அப்போ, என்ன செய்வாங்கன்னு பார்க்கலாமா என்றான்.

நான் பாட்டிக்கு பயந்து, நோ வே...வீட்டிற்கு தெரிஞ்சா தொலைச்சிடுவாங்க..என்றேன்..


யாருமே இருக்க மாட்டாங்க....வாடா என்றான்....

நான் பார்த்த திகில் படங்களே அவ்வப்பொழுது, என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஊமை விழிகளும், மை டியர் லிசாவும் பார்த்து விட்டு, சூசூ போவதற்கு அம்மாவின் துணையை நாடிக்கொண்டிருந்தேன்.

நான் வரலப்பா...என்றேன்....

நீ வந்துதான் ஆகணும்....உன் மேத்ஸ் பேப்பர் என் கிட்ட இருக்கு....என்று கொடூரமாய் ப்ளேக்மெயிலினான்.

காலையில் கிளம்பும் பொழுது, பாட்டி தடுத்தாள்.

சாப்பிடாம எங்கே போற? பழையது இருக்கு..சாப்டுட்டு போ....உங்க ஸ்கூல் பக்கம் போயிடாத....மசானக் கொள்ளை"

பாட்டியை ஏமாற்றுவது கஷ்டமாக இருந்தாலும், மேத்ஸில் ஒரு அந்தரங்கமான காரணத்தினால் ராஜுவுக்கு கீழ்ப்படிய வேண்டியதாயிற்று.

ராஜு கர்ம, சிரத்தையாய் விபூதி, குங்கமத்தோடு வந்திருந்தான். கையில் சாய்பாபா டாலர். கேட்டால், திடீரென்று பேய் பிடித்தால், இதனைக் காட்டினால் ஓடி விடும் என்றான். என் கையில் எந்த படமும் இல்லாதது, மனதில் உறுத்தியது.


ஸ்கூல் அருகே செல்ல முடியாத படி, பாலத்தில் நிறைய கூட்டம். பொன்னியின் செல்வனில் வரும் காளாமுக கூட்டம் போல. எல்லார் கையிலும் சூலாயுதம். எலுமிச்சம் பழம். கண்களில் ஆவேசம். பின்னணியில் உறுமி சத்தம்.

வாடா போயிடலாம் என்றேன்...

இருடா  என்றான்


என்னத்த மைதிலியே ரிதம் போல ஆடினார்கள். கோழியின் ரத்தத்தை அப்படியே குடித்தார்கள். கூட்டத்தில் மிக உயரமாய், வீரப்பன் மீசை வைத்திருந்தவர், எதற்கோ கர்ஜித்தார்.

எங்களை பார்த்து ரத்தம் ரத்தம் என்றார்.

சரி வாடா போகலாம் என்றான் ராஜு.

உயிர் பிழைத்த நிம்மதியில் வீட்டிற்கு திரும்பினோம்.

அடுத்த நாள் காலை, வழக்கம் போல ஸ்கூலிற்கு சென்ற பொழுது, வாசலிலேயே ராஜு பிடித்துக் கொண்டான்.

ஜுஸ் சாப்பிடுடா என்றான்...

சேமியா போட்டு, ஏதேதோ சேர்மானங்கள் சேர்த்து, கதம்பமாய் ஒரு கலரில் ஜுஸ் வழிந்தது.

எதுக்குடா

நேத்து நீ மட்டும் இல்லேன்னா, ஐம்பது ரூபா ஜெயிச்சுருக்க மாட்டேன்....

புரியல என்றேன்....

நேத்து எனக்கும் என் மாமாவுக்கும் ஒரு சின்ன போட்டி. நான் மசானக்கொள்ளைக்கு வர மாட்டேன்...பயந்துடுவேன்னாரு....ஆனா, நேத்து நம்ம வெற்றிகரமா பார்த்துட்டு வந்ததனாலே, வேற வழி இல்லாம பணம் கொடுத்துட்டார்....

யாருடா உங்க மாமா என்றேன்

அவன் காட்டிய திசையில் பார்த்தேன். வீரப்பன் மீசை தெரிந்தது.





No comments:

Post a Comment